டெல்லி: நிலுவையில் உள்ள சம்பள பாக்கித் தொகையை முழுவதையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் இதே நிலை நீடித்தால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இது போதாத காலம்தான், மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் பைலட்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வீட்டிலும் இடி... சம்பளம் வாங்காமல் வேலை செய்தால் அது எங்களை மட்டுமல்ல பயணிகளையும் பாதிக்கும் என்று ஜெட் ஏர்வேஸின் பொறியாளர்கள் விமானப் போக்குவரத்துத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க ஜெட் ஏர்வேஸின் முக்கிய பங்குதாரரான இதிஹாட் ஏர்வேஸ் தன்னுடைய் பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி எஸ்பிஐ வங்கியை கேட்டுக்கொண்டுள்ளது மற்றொரு பக்கம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸூக்கு இப்போது ஏழரை சனி நடந்துகொண்டு இருக்கிறது போல. விமான எரிபொருள் வாங்கியதில் தொடங்கி ஊழியர்களுக்கு சம்பளம் தராதது வரையில் ஏகப்பட்ட நிதி நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
சம்பள பாக்கி
விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் குத்தகை பணம் தராததால் சுமார் 30க்கும் மேற்பட்ட விமானங்களை பறக்க விடாமல் குத்தகை நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. விமான எரிபொருள் கொள்முதல் செய்ததற்கும் கடன்தாரர்களுக்கு பணத்தை தரமுடியவில்லை. இன்னொரு பக்கம் பைலட்டுகள் முதல் பொறியாளர்கள் வரையிலும் சம்பள பாக்கி பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.
நரேஷ் கோயல்
எட்டு திசையில் இருந்தும் ஜெட் ஏர்வேஸூக்கு சிக்கல்கள் சூழந்திருந்தாலும் ,இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் எதற்கும் அசைந்து கொடுக்காமல் உள்ளார். கடன்தாரர்களும் ஊழியர்களும் தலைமையை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.8,200 கோடி வரையில் கடன் கழுத்தை இறுக்கி உள்ளது. மேலும், கடன் பத்திரங்கள் வாங்கியவர்களுக்கு வட்டி கட்டுவதற்குக்கூட கையில் காசுகிடையாது.
எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார்
ஜெட் ஏர்வேஸின் இக்கட்டான நிலையை புரிந்துகொண்ட எஸ்பிஐ வங்கி கடன் பிரச்சனையை தீர்த்துவைத்து விமானங்களை பறக்க உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடந்த புதனன்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார், விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலா, பிரதமர் அலுவலக செயலர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
நாட்டு நலன் மக்கள் நலன்
அருண் ஜெட்லி உடனான சந்திப்பு குறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மோடி அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஏனெனில் இதில் நாட்டு நலனும் மக்கள் நலனும் உள்ளன. எனவே அரசிடம் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளோம் என்றார்.
ஏப்ரல் 1 முதல் ஸ்டிரைக்
கடன் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பைலட்டுகள் தங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் சம்பள பாக்கியை தராவிட்டால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிறுவனத்திற்கு சுமார் 1000 பைலட்டுகள் உள்ளனர். விமான பைலட்களின் திடீர் போர்க்கொடியால் ஜெட் ஏர்வேஸின் விமான சேவை கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்குக் கடிதம்
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் சங்கம், பிரதமர் மோடிக்கும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கும் எழுதியுள்ள கடிதத்தில் தங்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காத காரணத்தால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பலமுறை கூறியும் பயனில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் முடங்கும்
தொழில் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் விமானத்தை இயக்கி வருகிறோம். இந்த நிலை நீடித்தால் ஜெட் ஏர்வேஸ் முடங்கும் அபாயம் உள்ளது எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பளம் முழுவதையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.