டெல்லி: ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பைலட்கள் வேலை நிறுத்தத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை பெறுவதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பைலட்டுகள் வேலை நிறுத்தை ஒத்தி வைத்தனர்.
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் தேசிய உள்நாட்டு விமானகளின் குழுவிற்கும் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு 200 பைலட்டுகள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
பைலட்கள் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதால் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முடங்கும் அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.
12.5 சதவிகித சம்பளம் மட்டுமே
தொடர் நட்டம், கடன் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1 வருடமாகவே ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளத்தை அளிக்க முடியாமல் திணறி வந்தது. கடந்த நவம்பர் மாதம் வரை மட்டுமே முழு சம்பளத்தையும் வாங்கியிருந்தனர். டிசம்பர் மாதத்தில் 12.5 சதவிகித சம்பளத்தை மட்டுமே வாங்கியிருந்தனர்.
எங்களை கண்டுகொள்ளவில்லை
டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தோடு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு பைலட்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஆனால் நிர்வாகம் கடன் தாரர்களின் பிரச்சனைக்கு அளித்த முக்கியத்துவத்தை ஊழியர்களுக்கு அளிக்கவில்லை.
1500 கோடி கடன்
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொண்டதால் வேறு வழி இல்லாத ஊழியர்கள் தங்களின் சம்பளப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மத்திய அரசும் இப்பிரச்சனையில் தலையிட்டு கடன் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்டதை அடுத்து வங்கிகள் 1500 கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டன.
எங்களை கண்டுகொள்ளவில்லை
கடன் வழங்க ஒப்புக்கொண்டாலும் எஸ்பிஐ வங்கி கடனுக்கு பொறுப்பாக ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்கிக்கொள்ள முன்வந்தது. இதை அடுத்து ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று அனைவரும் நம்பினர். ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் தாரர்களுக்கு அளித்த முக்கியத்தை ஊழியர்களுக்கு தரவில்லை.
ஏப்ரல் 1 முதல் விமானங்கள் பறக்காது
பொறியாளர்கள் மற்றும் பைலட்களின் நிலுவை சம்பளம் அனைத்தையும் செலுத்தும் அளவிற்கு போதிய நிதி வசதி இல்லாததால் டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை மட்டுமே வழங்கமுடியும் என்று குண்டை தூக்கிப்போட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவை பாக்கி அனைத்தையும் வழங்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
வீ வில் மீட் அட் கோர்ட்
வேலை நிறுத்தம் தொடர்பாக பேசி முடிவெடுக்க ஜெட் ஏர்வேஸ் பைலட்களின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு(NAG) தங்களின் உறுப்பினர்களை மும்பை மற்றும் டெல்லி அலுவலகத்திற்கு அழைத்திருந்தது. இதற்கிடையில் பைலட்களில் 200 பேர் ஜெட் ஏர்வேஸ் நிர்வாத்திடம் தாங்கள் விடுமுறையில் செல்வதாகவும் தங்களின் சம்பளப் பிரச்சனையை சட்டபூர்வமாக பேசி தீர்க்கப் போவதாகவும் மிரட்ட ஆரம்பித்தனர்.
வாங்க பேசி தீர்க்கலாம்
சம்பளப் பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்க்க ஜெட் எர்வேஸ் நிர்வாகம் பைலட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பைலட்கள் தங்களின் டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் பாக்கி உள்ள சம்பளத்தை வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் படிப்படியாக செலுத்திவிடுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து பைலட்கள் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளனர்.
ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் முழு செட்டில்மென்ட்
வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்ற பைலட்களில் ஒருவர் கூறும்போது, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் படிப்படியாக நிலுவை பாக்கியை செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டது. ஆகவே நாங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
பறக்கவே விருப்பம்
வேலைநிறுத்தத்ப் போராட்டத்தை விரும்பாத மூத்த பைலட் இது பற்றி கூறும்போது, பைலட்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளனர். அவர்கள் எப்போதும் விமானங்களை இயக்குவதில் தான் ஆர்வமாக உள்ளனர். விமானங்களை ஓடுதளத்தில் நிறுத்தி வைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாகக் கூறினார்.
பைலட்கள் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதால் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முடங்கும் அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.