டெல்லி: பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்தால், தற்போதுள்ள நிதி சீர்திருத்தங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைகளும் நிச்சயம் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஜிஎஸ்டி வரிகளை குறைப்போம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதிச்சீர்திருத்த மற்றும் அரசின் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் தொடரும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கவேண்டும் என்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் ஜெட்லி கூறினார்.
பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறையானது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.
ஒரே வரிமுறை
ஜிஎஸ்டி வரி முறை வாட் வரி முறையை விட மிக எளிமையானது என்றும் வாட் வரி முறை போல் இல்லாமல் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரை நம்பவைத்து சமாதானப்படுத்தி பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி அதன் பிறகே ஜிஎஸ்டி வரிவிகித முறை அமல்படுத்தப்பட்டது.
5 அடுக்கு வரிமுறை
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரிந்தது. புதிய வரி முறை அமல்படுத்துவதற்க முன்பு சொன்னதைப் போல் இல்லாமல் 5 அடுக்கு வரிகளாக ஜஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வந்தது. இதில் பரிதாபம் என்னவெனில் வாட் வரிவிதிப்பில் வரி இல்லாத (Zero Tax) பல பொருட்களும் ஜிஎஸ்டி வரிமுறையில் 18 சதவிகிதம், 28 சவிகிதம் என்ற கூடுதல் வரி விகித பொருட்களாக மாற்றம் செய்யப்பட்டன.
வரி விகிதம் மாற்றம்
வரி இல்லாத பொருட்கள் கூடுதல் வரி விகித பொருட்களாக மாற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜெட்லியிடம் முறையிட்டனர். அவரும் கூடுதல் வரிவிகித பொருட்களில் சிலவற்றை 5 மற்றும் 12 சதவிகித அடுக்குக்கு மாற்றினார். இன்னும் சில குறிப்பிட்ட பொருட்கள் 18 மற்றும் 28 சதவிகித பொருட்களாக உள்ளன. அதையும் விரைவில் மாற்றியமைக்கப் போவதாக கடைசியாக நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார்.
நடத்தை விதி அமல்
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் ஜெட்லி கடந்த வியாழனன்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது நாங்கள் மீண்டும் ஆட்சியமைத்தால் ஜிஎஸ்டி வரிமுறையில் மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறினார். தற்போது தேர்தல் நடத்தைவிதிமுறை அமலில் உள்ளதால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் கூட குறையும்
கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, ஏராளமான நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. அரசின் செலவினங்களைச் சுருக்கி வருவாயை பெருக்கி நிதிப் பற்றாக்குறை இலக்கை கணிசமாக குறைத்துள்ளது. ஜிஎஸ்டியின் பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் ஆட்சியில் இருந்தால் இன்னும்கூட வரிகளை குறைத்திருப்போம் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம்
பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்தால், தற்போதுள்ள நிதி சீர்திருத்தங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைகளும் நிச்சயம் தொடர்ந்து நடைபெறும். ஜிஎஸ்டி வரிக் கொள்கைகள் குறித்த எங்களின் நிலைப்பாட்டில் குறிப்பாக இந்த இரு அம்சங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதில், நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலிலும் நம் நாட்டின் பொருளாதாரம் 7 முதல் 7.5 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.
சிமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி குறையுமாம்
பொருளாதார வளர்ச்சியை குறைய விடாமலும் அதேசமயம் ஸ்திரமாக நீடிக்குமாறும் கவனமாக பார்த்துக் கொண்டோம். மேலும் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடந்த 20 மாதங்களில் ஜிஎஸ்டியில் சிமென்ட் தவிர்த்து, பெருவாரியான பொருட்கள், 28 சதவீத வரி வரம்பில் இருந்து, 18 மற்றும் 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன. அடுத்து சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.
வரி வருவாய் அதிகரிப்பு
ஜிஎஸ்டியின் உச்சபட்ச வரியான 28 சதவிகித வரியை நீக்க, எங்களுக்கு அதிக காலம் தேவைப்படாது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வரி விகிதங்களை உயர்த்தவில்லை. ஒரு சில வரி இனங்களில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் கூடியுள்ளது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயும் உயர்ந்துள்ளது.
வாக்காளப் பெருங்குடி மக்களே
தற்போது அமலில் உள்ள வரிமுறை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியே வரவேண்டும் என்று பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். வர்த்தகர்களும் தொழில் துறையினரும் விருப்பப்படுகின்றனர் என்று ஜெட்லி தெரிவித்தார்.