சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு, வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், சில வங்கிகள் இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. இதன் அடிப்படையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி வட்டியை குறைத்துள்ளது. இதன் பட்டியலை வெளிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலக மேலாளர் ஏ.செந்தில் நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை நேற்று முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டியைக் குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மை கால கொள்கை நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும் வகையில் கடந்த வாரம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, 15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பினால் கடங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் என்றும் தெரிகிறது.