டெல்லி: நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வரும் 14ஆம் தேதிக்குள் பைலட்களுக்கு தரவேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு விமானிகள் சார்பாக தேசிய உள்நாட்டு விமானிகள் குழு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியே சம்பள பாக்கியை வழங்குவது குறித்து தீர்மானத்தை நாக் அமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது
நாக் அமைப்பு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரையிலும் ஜெட் ஏர்வேஸ் எந்த விதமான பதிலும் தராததால் பைலட்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடன் பிரச்சனையில் மத்திய அரசு தலையீடு
நாட்டின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்தது. கூடவே ஊழியர்கள் மற்றும் பைலட்களின் சம்பள பாக்கி வேற 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது. நிறுவனத்தின் கடன் சுமையால் தினமும் ஏதாவது ஒரு விமான சேவை நிறுத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசே தலையிட்டு கடன் பிரச்சனையை தீர்க்க வங்கிகள் உதவுமாறு கேட்டுக்கொண்டது.
நரேஷ் கோயல் பதவி விலகல்
மத்திய அரசு கேட்டுக்கொண்டாலும், வங்கிகள் அனைத்தும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்த விலகினால் தான் தாங்கள் உதவ முடியும் என்று விடாப்பிடியாக இருந்து வந்தன. வங்கிகளின் நெருக்கடியால் வேறு வழி இல்லாமல் நரேஷ் கோயலும் பதவி விலகினார்,
கடனுக்கு ஈடாக பங்குகள்
தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் பதவி விலகிய உடனே, வங்கிகள் எஸ்பிஐ தலைமையிலான அனைத்தும் வங்கிகள் கூட்டமைப்பு ரூ.1500 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டன. கடனுக்கு ஈடாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை எடுத்துக்கொண்டன. இதையடுத்து கடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சம்பளம் இல்லைனா ஸ்ட்ரைக்தான்
கடன் பிரச்சனை முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் மற்றும் பைலட்களுக்கு மாதந்தோறும் தொடர்ந்து சம்பளம் வழங்க முடியாமல் தவித்தது. தங்களின் சம்பளத்தை கேட்டு கேட்டு அலுத்துப்போன பைலட்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தங்களின் நிலுவை சம்பளம் அனைத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் வழங்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
சமாதான பேச்சுவார்த்தை
பைலட்கள் வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்த உடன், வேறு வழி இல்லாத ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான வினண் துபே பைலட்களின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழுவான நாக் அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் முடிவில் டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை மட்டுமே இப்போது தருவதாகவும், மீதமுள்ள ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை உள்ள நிலுவை சம்பளத்தை ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டார்.
எச்சரிக்கை மணி
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதால் பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றக்கொண்டனர். அதோடு நில்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்காவிட்டால் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்போதே எச்சரிக்கை மணி அடித்தனர்.
நாக் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்
பைலட்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டதால் விமான சேவையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை கேட்டு விமானிகள், வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். உள்நாட்டு விமானிகள் சங்கமான நாக் (NAG) சார்பில், ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபேக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டபூர்வ நடவடிக்கை தான்
ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை அதிகாரிக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெடு விதித்துள்ளதாக தெரிகிறது.