ஊட்டி : காளான் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் தன்மை நிறைந்தது. கொழுப்புச்சத்து குறைவு. நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை அதிகம் கொண்டிருக்கும் உணவு காளான். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவு சாப்பிடாதவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் உணவாக எடுத்துக் கொள்வது காளான் ஆகும்.
குறிப்பாக நீலகிரி,கோத்தகிரி, குன்னூர் அதனை சுற்றி பல கிராமப்புறங்களில் காளான் உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு இதற்கேற்ற வெப்ப நிலையும், ஈரப்பதமும் நிலவி வருவதால் காளான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சமையலுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொட்டுக் காளான் என்ற பட்டன் காளான் இது போன்ற மலை பிரதேசங்களில் மட்டும் விளைகிறது. இதனாலேயே இதன் ருசியும் அதிகமே.
இதனையடுத்து நடப்பு ஆண்டில் தற்போது வெயிலின் தாக்கத்தால் காளான் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது என்றும், இதனால் விலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. காளான் உற்பத்திக்கு 20 முதல் 27 டிகிரி வரை வெப்ப நிலை இருந்தால் போதும் என் கிற நிலையில் தற்போது 39.5 டிகிரிவரை வெப்பம் நிலவி வருகிறது. இதனாலேயே உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது.
வைக்கோல் படுக்கை
வைக்கோலைத் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை 5 மணி நேரம் ஊற வைத்து, நீராவி மூலம் அவித்து, தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இதன் பின்னர் பாலித்தீன் பைகளைக் கொண்டு தொற்று நீக்கப்பட்ட வைக்கோல்களை படுக்கை போலத் தூவி, அதன் ஒவ்வொரு சுற்றிலும் காளான் விதைகளைத் தூவவேண்டும்.
அதிகப்படியான ஈரப்பதம் வேண்டும்
இப்படிச் சுமார் முக்கால் அடி உயரத்துக்குக் காளான் படுக்கை தயாரித்து, அதன் இடைவெளிகளில் ஊசியால் துளையிட வேண்டும். பின்னர் காளானுக்காக அமைக்கப்படும் குடில்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கும்போது அந்தக் குடிலின் வெப்பநிலை சுமார் 20 முதல் 27 டிகிரி வரையிலும், அதன் ஈரப்பதம் 80 முதல் 90 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும்.
20- வது நாள் அறுவடை தொடங்கும்
காலை மாலை இரு வேளை களிலும் அரைமணி நேரம் மங்கிய வெளிச்சத்தை காளான் குடில்களில் ஏற்படுத்த வேண்டும். காளான் படுக்கை போட்ட 20-வது நாளிலிருந்து அறுவடை தொடங்கிவிடும். ஒரு காளான் படுக்கையில் 3 முறை அறுவடை செய்யமுடியும். இவ்வாறு அறுவடை செய்யப்படும் காளான் பாக்கெட்களில் 200கிராம் அளவிற்கு பாக்கெட் செய்து கடைகளுக்கு அனுப்ப படும்
ஒரு படுக்கைக்கு 1கிலோ அறுவடை செய்யலாம்
ஒரு படுக்கையிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம். இதன் ஆயுட்காலம் 45 நாட்கள் ஆகும். இதற்காகப் பயன் படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் வைக்கோல் படுக்கைகளைப் பின்னர் இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும்.