டெல்லி: பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் (அதாங்க 2000 ரூபாய் திட்டத்தின் கீழ்) இதுவரை சுமார் 3.10 கோடி விவசாயிகள் தங்களில் முதல் தவணைத் தொகையான 2,000 ரூபாயைப் பெற்றுக் கொண்டார்களாம்.
ஒரு படி மேலே போய் சுமார் 2.10 கோடி ஏழை விவசாயிகள் தங்களுடைய இரண்டாவது 2,000 ரூபாய் தவணையைக் கூட பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள் மத்திய விவசாய அமைச்சக அதிகாரிகள்.
கடந்த 01 பிப்ரவரி 2019 அன்று தேர்தலுக்காக போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 75,000 கோடி ருபாய்க்கான இந்த பிரம்மாண்ட பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தை அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி.
பெருமை
இந்த திட்டத்தின் கீழ், மொத்த குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து 2 ஹெக்டேர் நிலத்துக்குள் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி வழங்குவதாகச் சொன்னார்கள். இந்த 6,000 ரூபாய் நிதியும் மூன்று தவணைகளாக வழங்கப்படும் எனவும் சொன்னார்கள். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் பெருமையோடு சொன்னார்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.
மார்ச் 10, 2019
தேர்தல் ஆணையமோ மார்ச் 10, 2019-க்கு முன் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டிய தவணைகளைக் கொடுக்கலாம். மார்ச் 10, 2019-க்குப் பிறகு எந்த ஒரு விவசாயியையும் இந்த திட்டத்தின் கீழ் இணைத்து அவர்களுக்கான பணத்தைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அது தேர்தல் விதிமுறை மீறல்களாகக் கருதப்படும் என தெளிவுபடுத்தியது தேர்தல் ஆணையம்.
80 சீட் உள்ள உத்திரப் பிரதேசம்
பிப்ரவரி 01, 2019 அன்று அறிவிக்கப்பட்ட திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று தான் திறப்பு விழா நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியே உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கு வந்து 1.01 கோடி விவசாயிகளுக்கான Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் முதல் 2,000 ரூபாய் தவணையைச் செலுத்தினார்.
வேகம்
இந்திய வரலாற்றிலேயே விவசாய அமைச்சகம் இத்தனை வேகமாக செயல்பட்டிருக்காது. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு மார்ச் 10, 2019-க்குள் சுமார் 4.76 கோடி விவசாயிகளை Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் சேர்த்துவிட்டார்களாம். இப்போது அந்த 4.76 கோடி பேருக்கு மட்டுமே முதல் இரண்டு தவணைகளை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்படி Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் மூலம் 10,500 கோடி ரூபாய் வரை மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களாம்.
பெரும் பயனர்கள்
இதுவரை Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தை செயல்படுத்தியதில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் தான் அதிகம் பயன் அடைந்திருக்கிறார்களாம். ஆனால் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் ஒரு கோடி விவசாயிகளுக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்துவிட்டார்களாம்.