அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி உயர் பணமதிப்பு நடவடிக்கையை கொண்டுவந்து நாட்டுக்கு நல்லது தான் செய்துள்ளார், அவர் மிக நல்லவர், அவர் தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று குஜராத் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி போன்ற வரிச் சீர்திருத்த நடவடிக்கைகள் எங்களின் ஜவுளி மற்றும் வைர வியாபாரத் தொழில்களுக்கு நல்ல முறையில் உதவியாக உள்ளன என்று குஜராத் ஜவுளி மற்றம் வைர வியாபாரிகள் கூறினர்.
வாட் வரி விதிப்பில் ஜவுளிகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் எங்களுக்கு மோடிதான் வேண்டும் என்று கோரஸ் பாடினார்கள்.
பாதாளம் தொட்ட சென்செக்ஸ்..! பரபரப்பில் துடித்த நிஃப்டி..!
செல்லாத நோட்டு அறிவிப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி செல்லாததாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியால் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அதே போல் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் பாதிக்கப்பட்டனர்.
20 லட்சம் தொழிலாளர்கள்
ஒரே நாளில் தங்களின் வாழ்க்கைத்தரம் அடியோடு முற்றிலும் மாறிவிட்டதை அவர்களால் நம்ப முடியவில்லை. அதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் மற்றும் மாபெரும் வர்த்தக மாநிலமான குஜராத்தில் ஜவளி மற்றும் வைரக்கற்கள் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சரக்கு மற்றும் சேவை வரி
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் சிறிது சிறிதாக அதிலிருந்து மீண்டு வரும்போது அடுத்த அடியாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் வாட் வரி விதிப்புக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விகிதம் கொண்டுவரப்பட்டது.
ஒரே நாடு ஒரே வரி
வாட் வரி, சுங்க வரி, நுழைவு வரி என 17க்கும் மேற்பட்ட மறைமுக வரிகளை தூக்கி கடாசிவிட்டு அதற்கு பதிலாக ஒரே நாடு ஒரே வரிவிகிதம் என்ற கோஷத்தோடு சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்று பெயரளவில் சொல்லிவிட்டு 5 அடுக்கு வரி முறை அமல்படுத்தப்பட்டது.
சிறு, குறு நடுத்தர தொழில்கள் பாதிப்பு
வாட் வரியில் 3 அடுக்கு வரிமுறை மட்டுமே இருந்தது. அதிலும் பல பொருட்கள் வாட் வரிமுறையில் குறைந்த வரி விகிதங்களாகவே இருந்தன. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு வாட் வரிவிகிதத்தில் குறைந்த வரி விகித பொருட்கள் பெரும்பாலானவை 18 மற்றும் 28 சதவிகித அடுக்குக்கு மாற்றப்பட்டன. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தேர்தலுக்கு பின்பு குறைப்பு
ஜிஎஸ்டியில் அதிக வரிவிகித பொருட்களில் பெரும்பாலானவை, வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டன. இருந்தாலும் இன்னும் சில பொருட்கள் கூடுதல் வரி விகிதங்களாகவே உள்ளன. இவற்றையும் குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் ஆவண செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
வர்த்தகம் சூடுபிடிப்பு
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வர்த்தக மாநிலமான குஜராத்தில் ஜவுளி வர்த்தகம் மற்றும் வைரக்கற்கள் பட்டை தீட்டும் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இருந்தாலும் பின்னர் ஜிஎஸ்டி வரிமுறையை நன்கு புரிந்துகொண்ட அவர்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த ஜவுளி வியாபரமும், வைரக்கற்கள் பட்டை தீட்டும் தொழிலும் சூடுபிடிக்க ஆரம்பித்து. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது இருந்ததைவிட தற்போது நல்ல முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிறு வர்த்தகர்கள் பாதிப்பு
ஜிஎஸ்டி வரி முறை எங்கள் வர்த்தகத்தை பாதித்தது உண்மைதான். அதிலும் சிறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் அந்த பாதிப்பில் இருந்து அனைவரும் வெளிவந்துவிட்டனர், தற்போது வர்த்தகம் சற்று மேம்பட்டுள்ளது உண்மைதான் என்று சூரத் ஜவுளி வர்த்தகர் சங்கத் (Federation of Surat Textile Traders Association-FOSSTA) தலைவர் மனோஜ் அகர்வால் தெரிவித்தார்.
40 சதவிகிதம் குறைவே
ஜவுளி வர்த்தகம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது இருந்ததை விட இப்போது பரவாயில்லை. இருந்தாலும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரையிலும் குறைவாகவே உள்ளது. முன்கூட்டியே செலுத்தவேண்டிய வருமான வரிக்கும் அதிக அளவில் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக கூடுதலாக செலவும் பிடிக்கிறது. முன்னர் ஜவுளிகளுக்கு வரி ஏதும் கிடையாது, தற்போது அதற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது எஙகளின் வர்த்தகத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனோஜ் அகர்வால் கூறினார்.
மோடி நல்லவர்தான்
பிரதமர் மோடி பற்றி கூறும்போது, செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாஜக வெற்றி பெருமா இல்லையா என்பது தெரியாது, இருந்தாலும், எங்கள் மோடி மிக நல்லவர். அவர் மீண்டும் வந்தால் எங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது தான் என்றும் மனோஜ் அகர்வால் கூறினார்.
ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாய்
குஜராத் மாநிலத்தின் மற்றொரு முக்கிய வர்த்தகமான வைரக்கற்கள் பட்டை தீட்டும் தொழில் மற்றும் ஏற்றுமதி. இதில் கிட்டத்தட்ட 20 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஈடுபட்டுள்ள அனைவரும மோடி வருவதையே விரும்புகின்றனர்.
ஜிஎஸ்டி வேலையை காட்டுகிறது
பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவித்த சூரத் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பாகுபாய் குஜராத்தி, ஜிஎஸ்டி வரிமுறை இப்போது தான் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எங்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. மோடி அரசு தைரியமான திடமான கடினமான முடிவையே எடுத்துள்ளது. அதற்கான அறுவடையை தற்போது பெற ஆரம்பித்துள்ளது. ஜிஎஸ்டி வரி முறையால் நாங்கள் முறையான பில்களையே கொடுக்க வேண்டியுள்ளது.
எங்கள் சப்போர்ட் மோடிக்குத்தான்
ஜிஎஸ்டி வரி முறை எங்களைப் பொருத்த வரையிலும் பக்காவாக உள்ளது. வர்த்தகமும் முறையாக நடக்கத் தொடங்கியுள்ளது. இது எங்கள் வர்த்தகத்திற்கு நல்லதுதான். ஆகவே எங்கள் முழு ஒத்துழைப்பு எப்போதும் எங்கள் மோடிக்குத்தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தார்.