டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட மாதத்தில் இருந்து அவ்வப்போது வரி குறைப்பும் வரி விதிப்பில் மாற்றமும் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் நுகர்வோர்களுக்கு குறைவான அளவே பயன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் வரி குறைப்பின் பயன் நுகர்வோர்களுக்கு கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் விலையை குறைக்காமல் லாபம் சம்பாதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயன் குறித்து சமீபத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற சர்வேயில் 16ஆயிரம் பேர் பங்கேற்றனர். 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் 2019 ஏப்ரல் வரையிலான காலத்தில் வரி குறைப்பின் பயனை பல நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு வழங்கவில்லை. மக்களின் அத்தியாவசிய பொருட்களான ஷாம்பு, சோப்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நுகர்பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டும் நிறுவனங்கள் தங்களின் விலையை குறைக்காமல் லாபம் சம்பாதித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே தேசம் ஓரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. 5, 12, 18, 28 சதவிகிதம் என நான்கு விகிதங்களில்
வசூலிக்கப்படுகிறது. அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
நுகர்வோர்களுக்கு பயன்
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பினால் நுகர்வோர்களுக்கு பயன் ஏற்படும் ஏற்படும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். பொது மக்களும் தங்களுக்கு வரி குறைப்பின் பயன் கிடைக்கும் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பல நிறுவனங்கள் வரிகளை குறைக்கவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சோப்பு, ஷாம்பு வரி குறைப்பு
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக வரி குறைப்பு செய்யப்பட்டது. டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக 29 சதவிகித நுகர்வோர் கருத்து கூறியுள்ளனர்.
வரி குறைப்பால் பயனில்லை
நவம்பர் மாதம் வரி குறைக்கப்பட்டதால் முழு பயனையும் அடைந்ததாக நம்பவில்லை என்று 40 சதவிகித நுகர்வோர் கருத்து கூறியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடைந்த பயனை விட நவம்பர் மாதத்தில் இருந்து அதிக அளவில் பயன் அடைந்ததாக நம்பவில்லை என்று 47 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
வரி குறைக்கப்பட்ட பொருட்கள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ.சி இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸ் பிழியும் எந்திரம், 68 செ.மீ அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், வீடியோ கேம்கள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், ஹேர் க்ளிப்கள், ஷேவிங் கிரீம்,சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
வரி குறைக்கப்பட்ட பொருட்கள்
தரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள், மூங்கில் தரை விரிப் பான்கள், பித்தளை மண்ணெண்ணெய் ஸ்டவ், கையால் இயக்கப்படும் ரப்பர் ரோலர், ஜிப்புகள், நகைப்பெட்டிகள், பர்ஸ்கள் உள்ளிட்ட கைப்பைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் ஃபிரேம் செய்வதற்கான மரத்திலான சட்டங்கள், கண்ணாடிகளாலான சிலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகள், கண்ணாடிப் பாத்திரங்கள், கேக் கவர்கள், அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புகள், அலுமினியம் மற்றும் பித்தளைகள், காப்பர் உலோகங்கள் போன்றவற்றுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைந்ததா?
கைத்தறிகள், விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனாலுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவிகித வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி, 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. சில்லறை விற்பனையில், 1,000 ரூபாய்க்கு மிகாத விற்பனை விலைகொண்ட பின்னல் வேலைப்பாடு கொண்ட தொப்பிக்கான வரியும் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
கொள்ளை லாபம் ஈட்டிய நிறுவனங்கள்
வரி உயர்வின் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற்று வந்த நிறுவனங்களும், உணவகங்களும் வரி குறைப்பிற்குப் பின் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் பொருட்களின் விலையை உயர்த்தி வருமானத்தை அதிகரித்தன. இது தொடர்பாக பல புகார்கள் எழுந்தன. சலவைத்தூள், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பி அண்ட் ஜி நிறுவனம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் விலையை குறைக்காமல், 50 கோடி ரூபாய் மிகை லாபம் ஈட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ. 250 கோடி லாபம்
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மிகை லாப தடுப்பு ஆணைய அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின்னரும், பொருட்களின் விலையை குறைக்காமல் விற்பனை செய்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு 250 கோடி ரூபாய் கூடுதல் லாபம் கிடைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மக்களுக்கு பயன் கிடைக்குமா?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 ரூபாய்க்குட்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 12 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதத்திலிருந்து 18 தவிகிதமாக குறைக்கப்பட்டது. டயர், பவர் பேங்க், டிவி, கணினி மானிட்டர், லித்தியம் அயன் பேட்டரிகள், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர் - 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பின் பயன் நுகர்வோர்களுக்கு கிடைக்கவேண்டும் என்றும் மிகை லாப தடுப்பு ஆணையம் கண்டிப்பாக கூறி வருகிறது. விலையை குறைக்காமல் அதிக லாபம் சம்பாதித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.