டெல்லி: வரி மோசடி மற்றும் வரி முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-இன்வாய்ஸ் என்னும் மின்னணு விலைப்பட்டியலை வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜிஎஸ்டி இணையதளத்திலும் அரசு இணையதளத்திலும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக ஜிஎஸ்டியில் பதிவு செய்த விற்று முதல் வரம்புக்கு (Turnover Threshold) மேற்பட்ட தொழில் துறையினர் அனைவரும் இ-பில் உருவாக்கம் செய்துகொள்ள முடியும்.
வரி முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஜிஎஸ்டி ஆணையம் அடுத்தடுத்து ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்களை செய்துகொண்டே வருகிறது. இதனால் வரி மோசடியில் ஈடுபடுவோர் மாற்று வழியை யோசித்துக்கொண்டுள்ளனர். மோசடி செய்பவர்களை தடுக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரே இ-வே பில் மூலம் கோடிக்கணக்கில் வரி மோசடியும் முறைகேடுகளும் நடைபெறுவதை தடுக்க தற்போது விலைப்பட்டியல் என்னும் பில்லை தனியாக உருவாக்குவதை தவிர்த்து முற்றிலும் மின்னணு முறையில் இ-பில் என்னும் இ-இன்வாய்ஸ் உருவாக்கும் முறையாகும். இ-இன்வாய்ஸ் உருவாக்கும்போது கூடவே உடனடியாக இ-வே பில்லும் உருவாக்கப்பட்டுவிடும் இதனால் போலியாக இன்வாய்ஸ் உருவாக்க முடியாது என்பது ஜிஎஸ்டி ஆணையத்திற்கு சாதகமான அம்சமாகும்.
ஜிஎஸ்டி அறிமுகம்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் சிலபல குறைபாடுகள் காணப்பட்டாலும் அவை அனைத்தும் விரைவிலேயே சரி செய்யப்பட்டன. அதோடு மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி செலுத்துதல் போன்றவற்றுக்கான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்களும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜிஎஸ்டி ரிட்டன் அறிமுகம்
தொழில்துறையினரும் வர்த்தகர்களும் முதலில் சற்று குழப்பமடைந்தாலும், பின்னர் புதிய ரிட்டன் படிவங்களை புரிந்துகொண்டதால் அவர்களும் தங்களின் மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யத் தொடங்கினர். இதனால் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வருவாய் சற்று சுனக்கமாக இருந்தாலும் பின்னர் அடுத்தடுத்து வந்த மாதங்களில் வருவாய் அதிகரிக்க தொடங்கியது.
சரக்கு பரிமாற்றம் ஆவணம் எப்போ
மாதாந்திர ரிட்டன் அமல்படுத்தப்பட்டு வரி வருவாய் அதிகரித்து வந்தாலும், தொழில் துறையினர் தங்களின் பிற மாநில கிளைகளுக்கும் மாநிலத்திற்கு உள்ளே உள்ள கிளைகளுக்கும் சரக்குகளை அனுப்பத் தேவைப்படும் சரக்கு பரிமாற்ற ஆவணம் பற்றிய அறிவிப்பு எதையும் ஜிஎஸ்டி ஆணையம் வெளியிடவில்லை.
இ-வே பில் கட்டாயம்
தொழில்துறையினரின் நிலைமையைப் புரிந்துகொண்ட ஜிஎஸ்டி ஆணையமும் சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் முறையை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டுவந்தது. இதன்மூலம் 50000 ரூபாய்க்கு கூடுதலான சரக்குகளை அனுப்புவதற்கு இ-வே பில் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
வரி மோசடி
இ-வே பில் அமல்படுத்தப்பட்டு சரக்கு பரிமாற்றம் நடந்துவந்தாலும், சில வர்த்தகர்களும் தொழில் துறையினரும் இதைப் பயன்படுத்தி வரி மோசடியிலும் வரி முறைகேட்டிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஜிஎஸ்டி ஆணையத்திற்கு தெரியவந்தது. இதைத் தடுக்கும் விதமாக தற்போது இ-வே பில் முறையில் அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது.
அஞ்சல குறியீடு அறிமுகம்
இ-வே பில்லில் மற்றொரு அம்சமாக சரக்குகளை பெறுபவரின் முகவரியோடு அந்த பகுதியின் அஞ்சலக குறியீட்டு எண்ணையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்றும், இதன்மூலம் கூடுதலாக 10 சதவிகித தூரத்திற்கு மட்டுமே இ-வே பில் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட தூரத்தை தாண்டினால் இ-வே பில் ரத்து செய்யப்பட்டுவிடும். மேலும் போலியான சரக்கு பரிமாற்றமும் தடுக்கப்பட்டுவிடும் என்று ஜிஎஸ்டி ஆணையம் நம்பிக்கை தெரிவித்தது.
ரூ.500 கோடி வரி வசூல் முடக்கம்
ஜிஎஸ்டி ஆணையத்தின் அடுத்த அதிரடியாக ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கலில் செய்துள்ள மாற்றம். தற்போது, ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்யும் வர்த்தகர்களும் தொழில் துறையினரும், அரசுக்கு வரி வருவாயை தடுக்கும் முறையில் மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வசூல் தடைபட்டுள்ளது.
ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது
ஜிஎஸ்டி வரி வசூல் தடைபட்டதை உணர்ந்த ஜிஎஸ்டி ஆணையம் தற்போது வரி வசூல் தொடர்ந்து சீராக நடைபெற வேண்டி, இனிமேல் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வோர் தொடர்ச்சியாக 2 மாதங்கள் ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், இ-வே பில் உருவாக்கம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது. ஆகவே இனிமேல் மாதந்தோறும் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் உருவாக்குவது நடக்காது.
இ-பில் உருவாக்கம்
ஜிஎஸ்டியின் அடுத்த அதிரடியாக இ-பில் என்னும் மின்னணு விலைப்பட்டியல் (e-invoice) ஆகும். தற்போது சரக்குகளுக்கான பில் எனப்படும் இன்வாய்ஸ் (Invoice) உருவாக்கப்பட்டு, அதன்பின்னர் தனியாக இ-வே பில் உருவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் கால விரயமும் ஏற்படுகிறது. அதோடு ஒரே இ-வே பில்லில் பல முறை சரக்குகள் பரிமாற்றம் செய்து முறைகேடு செய்யப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் இதுவரையிலும் சுமார் ரூ.100 கோடி வரையிலும் வரி முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இ-இன்வாய்ஸ் மென்பொருள்
ஒரே இ-வே பில் மூலம் கோடிக்கணக்கில் வரி மோசடியும் முறைகேடுகளும் நடைபெறுவதை தடுக்க தற்போது விலைப்பட்டியல் என்னும் பில்லை தனியாக உருவாக்குவதை தவிர்த்து முற்றிலும் மின்னணு முறையில் இ-பில் என்னும் இ-இன்வாய்ஸ் உருவாக்கும் முறையாகும். இதற்காக ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்த தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியாக இ-இன்வாய்ஸ் மென்பொருள் தளம் உருவாக்கப்படும்.
இரட்டைக் குழல் துப்பாக்கி
ஜிஎஸ்டி இணையதளத்திலோ அல்லது அரசு இணையதளத்திலோ தனியாக உருவாக்கப்பட்ட மென்பொருள் (Software) இ-வே பில் இணையதளத்தோடு(ewaybill.nic.in) இணைக்கப்பட்டு இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறிவிடும். இதனால் இ-இன்வாய்ஸ் உருவாக்கும்போது கூடவே உடனடியாக இ-வே பில்லும் உருவாக்கப்பட்டுவிடும் இதனால் போலியாக இன்வாய்ஸ் உருவாக்க முடியாது என்பது ஜிஎஸ்டி ஆணையத்திற்கு சாதகமான அம்சமாகும்.
பாய்ண்ட் டூ பாய்ண்ட்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பில் என்னும் இ-இன்வாய்ஸ் முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் இ-பில்லை உருவாக்கிக் கொள்ள முடியும். முக்கியமாக ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள மற்றொரு வர்த்தகருக்கோ அல்லது தொழில் துறையினருக்கோ தான் (Business to Business ) இ-பில்லை உருவாக்கம் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி ரிட்டனோடு இணைப்பு
இ-பில்லின் மற்றொரு முக்கிய அம்சமாக, இந்த மென்பொருளானது நேரடியாக வருமான வரி ரிட்டன்களோடு இணைக்கப்பட்டுவிடும். இதனால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் தங்களின் ஆண்டு விற்றுமுதல் (Yearly Turnover) மற்றும் லாப நட்டக் கணக்கிலும் (Profit & Loss account) மோசடி செய்ய முடியாது என்பதும் நினைவில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்.
படிப்படியாக அமல்படுத்தப்படும்
ஜிஎஸ்டியில் அறிமுகப்படுத்ப்படும் புதிய இ-பில் முறை பற்றி விளக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள், இ-பில் முறை அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டுவிடும். அனைத்து இ-பில்களும் அரசு இணையதளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று தெரிவித்தனர்.
13 பேர் அடங்கிய குழு
புதிய இ-பில் திட்டத்தை உருவாக்குவதில் 13 நபர்கள் அடங்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இ-பில் திட்டம் முழுமை பெற்று இடைக்கால அறிக்கையை தயார் செய்துவிடும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்தோர் 1.21 கோடி பேர்
தற்போது ஜிஎஸ்டியில் சுமார் 1.21 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் பேல் காம்போசிசன் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.