டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்தபோது செலுத்திய ஐஜிஎஸ்டி வரியை மிக விரைவில் ரீஃபண்ட் பெறும் வகையில் அனைத்தும் தானியங்கி மயமாகிறது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது.
உள்ளீட்டு வரிப் பயன்பாடை திரும்பப் பெறுவதற்கு அதிக காலம் பிடிப்பதால், ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து தங்களின் தொழிலை நடத்த தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தானியங்கி வசதி அறிமுகப்படுத்தப்படுவதால், இனிமேல் சிறு ஏற்றுமதியாளர்களும் எளிதில் தங்கள் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க முடியும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஐஜிஎஸ்டி ரீஃபண்ட்
ஜிஎஸ்டி வரி முறையில் சாதாரணமாக தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் தாங்கள் செய்த கொள்முதலுக்கு செலுத்திய உள்ளீட்டு வரிப் பயன்பாடை (Input Tax Credit) விற்பனை செய்வதற்கு செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி வரியில் கழித்துகொள்ள முடியும். அதேபோல் தான் வெளிமாநிலங்களில் இருந்து செய்த கொள்முதலுக்கு செலுத்திய ஐஜிஎஸ்டி (IGST உள்ளீட்டு வரிப் பயன்பாட்டையும் விற்பனைக்கான வரியில் இருந்து கழித்தது போக மீதம் உள்ள வரியை செலுத்திக் கொள்ள முடியும். உள்நாடுகளில் செய்யும் தொழில்களுக்கு விதிமுறை இப்படி என்றால், ஏற்றுமதி செய்வதற்கு விதிமுறை மாறுபடுகிறது. இதில் 2 முறைகளில் ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பயன்பாட்டை திரும்பப் பெறமுடியும்.
சொத்து ஆவணம் வேண்டும்
ஐஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் ஒரு வருடத்திற்கான வங்கி உறுதியளிப்பு ஆவணம் (Bank Guarantee) அல்லது கடன் பத்திரங்களை அளித்துவிட்டு ஏற்றுமதி செய்துகொள்ள முடியும். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. வங்கி உறுதியளிப்பு ஆவணம் தாக்கல் செய்யவேண்டுமானால் அதற்கு ஈடான தொகையை வங்கியில் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அதற்கு ஈடான சொத்து ஆவணத்தை வங்கியில் தாக்கல் செய்யவேண்டும். சிறு ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது.
ஒரு வருசம் காத்திருக்கணும்
மற்றொரு முறையானது, பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் ஏற்றுமதிக்கான ஐஜிஎஸ்டி வரியை முதலில் செலுத்திவிட்டு, பின்னர் அதற்கான ஆவணங்களை ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் சமர்பித்து ஆய்வு செய்த பின்னர் தான் நாம் செலுத்திய ஐஜிஎஸ்டி வரியை ரீஃபண்ட் தொகையை பெற முடியும். இதற்கு குறைந்த பட்சம் ஆறு முதல் 1 வருடம் வரையிலும் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும்.
சேவைகளுக்கும் இது பொருந்தும்
இதே நடைமுறைதான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கும் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்பவர்களுக்கும் பொருந்தும். அதேபோலத்தான் சேவைகளை அளிப்பவர்களுக்கும் பொருந்தும்.
ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்கும்
இனிமேல் இதுபோல் ஐஜிஎஸ்டி வரியை முன்கூட்டியே செலுத்திவிட்டு வெகுகாலம் வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்றுமதியாளர்களும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களும், அவர்களுக்கு பொருட்களையோ அல்லது சேவைகளையோ அளிப்பவர்களும் தங்கள் ஐஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையை சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கிக் கணக்கில் வரவு
இதற்கான தானியங்கி கணினி வசதி செயல்படுத்தப்படவுள்ளது. அதோடு ஜிஎஸ்டி இணையதளத்துடன் சுங்கத்துறையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்த சில நாட்களிலேயே ஐஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை நம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் தாமதமும் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
போலிகள் ஒழிக்கப்படும்
இது குறித்து மத்திய வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வருவாய்த் துறையும் ஜிஎஸ்டி ஆணையமும் இணைந்து தானியங்கி முறையில் ஐஜிஎஸ்டி ரீஃபண்ட் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. இதன் மூலம் ரீஃபண்ட் தொகை விரைவாக திருப்பியளிக்க உதவும். அதோடு போலியான ரீஃபண்ட் தொகை இருந்தால் அதை கண்டுபிடிக்கவும் முடியும் என்றார்.
சிறப்புப் பொருளாதார மண்டலம்
தற்சமயம் முன்கூட்டியே ஐஜிஎஸ்டி வரி செலுத்தி பின்னர் பொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கு மட்டுமே ரீஃபண்ட் திரும்பப் பெறும் வசதி உள்ளது. புதிதாக நடைமுறைப்படும் தானியங்கி கணினி வசதியானது பொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கு மட்டுமல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு பொருட்களை அளிப்பவர்களும், சேவைகளை அளிப்பவர்களும் இனிமேல் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றார்.
இணைந்த கைகள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தானியங்கி கணினி முறையில் ஜிஎஸ்டி இணையதளத்துடன் மத்திய சுங்கத் துறையும் இணைக்கப்பட்டுவிடும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் ஏற்றுமதியாளர்களின் வங்கிக் கணக்கில் தன்னிச்சையாக ஐஜிஎஸ்டி ரீஃபண்ட் வரவு வைக்கப்பட்டு விடும்.
சந்திப்பு தேவையில்லை
ஏற்றுமதியாளர்கள் தங்களின் ஏற்றுமதி தொடர்பான ஆவணங்களை சமர்பித்த 2 வாரங்களில் ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப்பயன்பாட்டை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக ஜிஎஸ்டி வரி அதிகாரிகளை சந்திக்கவேண்டிய அவசியமும் கிடையாது. ஜிஎஸ்டி இணையதளத்தின் மூலமாகவே ரீஃபண்ட் தொகை திரும்பக் கிடைக்கும். இதற்காக ஏற்றுமதியாளர்கள் ஐஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள ஜிஎஸ்டி ஆர்ஃஎப்டி-01ஏ(GST RFD-01A) படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.
வந்ததை வரவில் வை
விண்ணப்ப படிவத்துடன் இதர ஆவணங்களையும் இணைத்து வட்டார ஜிஎஸ்டி வரி அதிகாரியிடம் அளிக்க வேண்டு. அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் சில நாட்களில் தன்னிச்சையாக ரீஃபண்ட் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
மூன்றாவது கண்
இது குறித்து விளக்கமளித்த ஏஎம்ஆர்ஜி & அசோசியேட்ஸ் (AMRG & Associates) நிறுவனத்தின் இணை உரிமையாளர், முன்கூட்டி செலுத்திய ஐஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பயன்பாடு திரும்பப் பெறும் நடைமுறை முழுவதும் கணினி மயமாவதால், ஏற்றுமதியாளர்களின் விலைப்பட்டியல் (Invoice) சரக்குகளின் விவரம் (Packing List) ஐஜிஎஸ்டி வரி என அனைத்து விவரங்களையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றார்.