டெல்லி: விமான நிலையங்களில் உள்ள டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வாங்கும் துணிமணிகள், சாக்லேட்டுகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி பிடித்தம் கிடையாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதின் கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தனிநபரின் தேவைக்காக வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் தேவையில்லாதது என்று கூறியதோடு, அவை சுங்க எல்லைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனை நடைபெறுவதால் அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்தது.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் (சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர) அமல்படுத்தப்பட்டது. உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் முதல் முழுமை பெற்ற பொருட்களின் விற்பனை வரையில் அனைத்து நிலைகளிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டாயமாக்கப்பட்டது.
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான வகைகளுக்கு மட்டும் பழைய வாட் வரிமுறையே தொடர்ந்து அமலில் இருக்கிறது. அதுவும் நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வரி இல்லா இலவச மண்டலமான (Tax Free Zone) சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா இல்லையா என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தே நிலவிவருகிறது.
தற்போது டியூட்டி ஃப்ரீ ஷாப்களுக்கு தேவையான பொருட்களை விற்பவர்கள் வாங்குபவர்களிடம் இருந்து கடவுச்சீட்டு (Passport) நகல் பெற்றுக்கொண்டு பொருட்களை விற்பனை செய்வதுண்டு. பின்னர் டியூட்டி ஃப்ரீ ஷாப்கள் பொருட்களை விற்ற பின்பு ஏற்கனவே செலுத்திய வரியை ரீஃபண்ட் அளிப்பது வழக்கம்.
இந்தியாவிலுள்ள சில சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதுண்டு. குறிப்பாக டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இது பற்றி குறிப்பிட்ட மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், டியூட்டி ஃப்ரீ ஷாப்கள் அனைத்தும் இந்திய எல்லைகளில் தான் உள்ளன. அதேபோல் இது ஏற்றுமதி வர்த்தக எல்லையிலும் வராது. எனவே அங்கு விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மதுபானங்கள் ஜிஎஸ்டி வட்டத்திற்குள் கொண்டுவரப்படாததால் சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் மதுவிற்பனை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் ஐயாயிரத்து 200 கோடி ரூபாயை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே டெல்லி உயர்நிலை மதிப்பீட்டு ஆணையமும் (The authority of Advance Ruling) டெல்லி சர்வதேச விமான நிலையங்களில் செயல்படு டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அதின் கிருஷ்ணா என்பவர் சர்வதேச விமான நிலையங்களில் செயல்படும் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், தனிநபரின் தேவைக்காக வாங்கும் துணிமணிகள், சாக்லேட்டுகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் தேவையில்லாதது என்று கூறியதோடு, அவை சுங்க எல்லைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனை நடைபெறுவதால் அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்தது.