டெல்லி: இதுவரையிலும் ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரப்படாமல் இருந்த பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவருவதன் முன்னோட்டமாக முதலில் விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர ஜிஎஸ்டி ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் விமான டிக்கெட்டுகளின் விலையும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்திலேயே ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியதால் உற்சாகமடைந்த மத்திய அரசு, வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே இது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 2ஆவது முறையாக அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதாலும், ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதாலும் இரண்டையும் கொண்டாடும் வகையில் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒரே தேசம் ஒரே வரி
வாட் வரி, சுங்க வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி என ஏகப்பட்ட வரிகளாக இருந்ததால் மத்திய மாநில அரசுகளுக்கு வரவேண்டிய வரி வசூல் தடைபடுகிறது என்ற காரணத்தை சொல்லி, அதற்கு பதிலாக ஒரே நாடு ஒரே வரி முறை என்ற முழக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விகித முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
5 விகித வரி முறை
ஒரே நாடு ஒரே வரி விகித முறை என்று சொல்லிவிட்டு, பின்னர் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்திய போது வர்த்தகர்கள், தொழில் துறையினர் முதல் சாதாரண மக்கள் வரையிலும் அதிர்ச்சி அடையும் வகையில் 5 விகித வரி முறைகளை அமல்படுத்தியது. வெகு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி முறையில் வரி இல்லாத பொருட்களாக கொண்டுவரப்பட்டன.
பெட்ரோல், மது வகைகள்
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, வாட் வரி முறையில் வரியற்ற பொருட்களாக இருந்த பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி விகித முறையில் அதிக பட்ச வரியான 28 சதவிகிதத்திலும் 18 சதவிகிதத்திலும் முறைப்படுத்தப்பட்டன. அதேபோல் முக்கியப் பொருட்களான பெட்ரோலியப் பொருட்களும், மது வகைகளும் தொடர்ந்து வாட் வரி விதிப்பு முறையிலேயே தொடரும் என்று மத்திய அரசு மிக புத்திசாலித்தனமாக ஒதுக்கி வைத்துவிட்டது.
ஜிஎஸ்டியில் ஓட்டை விழும்
பெட்ரோலியப் பொருட்களையும் மது வகைகளையும் ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடியாக குறையும். ஆனால் அதே சமயத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாயில் பெரிய ஒட்டை விழும் என்ற காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் எடுத்த எடுப்பிலேயே அந்த முயற்சியை கைவிட்டுவிட்டன.
மத்திய அரசு சமாதான முயற்சி
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மது வகைகளையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மத்திய அரசும் அவர்களை சமாதானம் செய்யும் வகையில் விரைவில் இவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர ஆவண செய்யப்படும் என்று சமாதானம் சொல்லி வந்தது.
ஏக்கப் பெருமூச்சு
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வரும்போது இந்தியாவில் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தன. இதைப் பார்த்து அனைத்து தரப்பினரும் பெட்ரோலியப் பொருட்களை எப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரப்படுமோ என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர்.
கோமா நிலையில் பெட்ரோல் டீசல் விலைகள்
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த லோக்சபா தேர்தல் நடைமுறைகளால் பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாறாமல் இருந்துவந்தன. பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்தால் எங்கே ஆட்சி கைவிட்டுப் போய்விடுமோ என்ற பயத்தினால் லோக்சபா தேர்தல் முடியும் வரையிலும் பெட்ரோல், டீசல் விலைகள் கோமா நிலையிலேயே இருந்து வந்தன.
சுயநினைவு திரும்பியது
ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதத்தில் 18ஆம் தேதி வரையிலும் கோமா நிலையில் இருந்த பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் சுயநினைவுக்கு வந்தது போல் வழக்கமாக தினசரி ஏறிக்கொண்டே வருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்கையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இப்போதாவது பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மீண்டும் மோடி
அதோடு, ஆளும் பாஜக கூட்டணியே தற்போது நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை வாரிச் சுருட்டி அபார வெற்றி பெற்றுவிட்டது. நரேந்திர மோடியே அசுர பலத்துடன் மீண்டும் பிரதமராக தொடரப்போவதால் பொருளாதார வளர்ச்சி, வளம் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பு இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிரடியான நல்ல மாற்றங்களை கொண்டுவருவார் என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மத்திய அரசு முயற்சி
பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோலியப் பொருட்களையும் மதுபானப் பொருட்களையும் விரைவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
விமான எரிபொருள்
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான வகைகளை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவருவதன் முன்னோட்டமாக முதலில் பெட்ரோலியப் பொருட்களில் முதன்மையாக இருக்கின்ற விமான எரிபொருளையும் (Aviation turbine fuel) இயற்கை எரிவாயு (Natural Gas) ஆகிய இரண்டையுமே ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
புதிய அமைச்சரவை முடிவெடுக்கும்
மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் இது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
1 லட்சம் கோடியை தாண்டிய வரி வசூல்
கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் எதிர்பார்த்த இலக்கை எட்டியதாலும், நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்யதாலும் சோதனை முயற்சியாக முதலில் விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு மத்திய அரசு தைரியமாக முன்வந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிய ஆட்சி பொறுப்பேற்ற உடன் வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி கலந்து பேசி இறுதி முடிவு எட்டப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
25000 கோடி ரூபாய் லாபம்
விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு இரண்டையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரும்போது 18 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு உள்ளீட்டு வரிப்பயன்பாடும் கிடைக்கும். மொத்தத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சுமார் 25000 கோடி ரூபாய் வரையிலும் லாபம் கிடைக்கும் என்று தெரிகிறது.
எரிபொருள் செலவு குறையும்
விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரும்போது விமான டிக்கெட்டுகளின் விலையும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கு ஆகும் செலவுகளில் விமான எரிபொருள் செலவே சுமார் 40 சதவிகிதம் வரையிலும் ஆகிறது. விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரும்போது செலவும் குறையும். வருமானம் அதிகரிக்கும் விமான எரிபொருளின் விலை குறைவதால், விமான டிக்கெட்டின் விலையும் தானாகவே குறையும். இதனால் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்பதோடு விமான நிறுவனங்களின் வருமானமும் கணிசமாக அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.