டெல்லி: இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த சந்தோசத்தில் சூட்டோடு சூட்டாக வருமான வரி, ஜிஎஸ்டி வரி மோசடி மற்றும் பணமோசடி குறித்து விசாரணை செய்வதற்காக சந்தேக வட்டத்திற்குள் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு தயாராகி வருகிறது.
ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டன்களை ஆய்வு செய்ததில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகப்படியான உள்ளீட்டு வரிப்பயனை திரும்பப் பெற்று வரி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாட் வரி விதிப்பு முறை அமலில் இருந்த போது விற்பனை வரித்துறை அந்தந்த மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருந்தது. இதனால் விற்பனை வரி செலுத்துவோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாதாந்திர ரிட்டன்களையும் ஆண்டறிக்கையையும், வருமான வரி ரிட்டன்களையும் தாக்கல் செய்து வந்தனர்.
இவ்வாறு வருமான வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும், ரிட்டனில் குறிப்பிடும் ஆண்டு வருவாய் மற்றும் விற்றுமுதலும் (Turnover) விற்பனை வரிக்கான ரிட்டன்களில் குறிப்பிட்டிருந்த தரவுகளும் (DATA) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்து வந்தது. இப்படி இரண்டு துறைகளும் தொடர்பில்லாமல் இருந்ததால் வரி மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்து வந்தது.
இதனை உத்தேசித்தே மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes), வரி மோசடி மற்றும் பண மோசடி என இரண்டையும் முற்றிலும் ஒழிக்கும் விதத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.
வாட் வரி விதிப்புக்கு மாற்றாக ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வந்தாலும், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி இரண்டும் தொடர்பில்லாமல் இருந்ததால், வரி மோசடியும் பண மோசடியும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் மத்திய நேரடி வரிகள் வாரியமும் வேறு வழியில்லாமல் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித் துறை என இரண்டையும் இணைக்கும் முடிவுக்கு வந்தது.
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி என இரண்டையும் இணைத்துவிட்டால் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டனில் குறிப்பிடும் விற்பனை விவரங்கள் அனைத்தும் தானாகவே வருமான வரி ரிட்டன் படிவத்திலும் பதிவேற்றம் செய்துகொள்ளும். இதனால் வரி மோசடி முற்றிலும் தவிர்க்கப்படும். நடப்பு நிதியாண்டில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்திருந்த ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ரிட்டன்களை கவனமாக ஆராய்ந்ததில் ஆயிரக்கணக்கான ரிட்டன்களில் வரி ஏய்ப்பு மோசடி மற்றும் பணமோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு கூடுதலாக ஜிஎஸ்டி ரீஃபண்ட்களையும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் வரி மோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதற்காகவே அதிக அளவில் போலி நிறுவனங்கள் (Shell companies) உருவாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான நிறுவனங்கள் அனைத்துமே பணமோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து எந்தவித பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பல நிறுவனங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தங்களின் ஜிஎஸ்டி ரிட்டன்களில் பதிவு செய்து தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அந்த தரவுகளெல்லாம் வருமான வரி ரிட்டன்களில் எதிரொலிக்கவில்லை.
எனவே வரி மோசடியில் ஈடுபடுபவர்கள் ஜிஎஸ்டியில் உள்ள ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும், வரி மோசடிகளை தடுக்க, இரண்டு துறைகளையும் இணைக்க மத்திய நேரடி வரிகள் ஆணையம் (Central Board of Direct Taxes) முடிவெடுத்தது. ஆனால லோக்சபா தேர்தலை காரணமாக காட்டி சில கட்சித் தலைவர்களும் மாநில அரசுகளும் தயக்கம் காட்டி தேர்தல் முடிந்த உடன இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்து வந்தனர்.
தற்போது லோக்சபா தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டதால், மத்திய அரசும் வரி மோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டியுள்ளது.
எனவே, முதலில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் விளக்கம் கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதில்கள் திருப்தியளிக்காவிட்டால், அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் தயாராகிவருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் பாஜக கூட்டணி அரசு, லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் மற்றும் வரி மோசடி செய்பவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. தற்போது தேர்தல் முடிந்து விட்டாதால் மத்திய அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தனது சாட்டையை சூழற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.