டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 20ஆம் தேதி கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 28 சதவிகித உயர் வரி விகித பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சராக இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் வந்ததை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரும் வர்ததகர்கள் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஏதாவது மாற்றங்களை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டினாலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உயர் வரி விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரி செலுத்த முடியாமல், படிப்படியாக நலிவடைந்து நிறுவனங்களை மூடிவிட்டமாக தெரியவந்துள்ளது.
தற்போது 28 சதவிகித வரி விதிப்பு பிரிவில் 28 பொருட்கள் உள்ளன. வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் 2019-20ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலிலும் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
பல விகித வரிமுறை
வாட் வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே தேசம், ஒரே வரிமுறை என்று பலத்த ஆரவரத்துடன் ஜிஎஸ்டி வரி முறை கொண்டுவரப்பட்டாலும், ஒரே வரி முறைக்கு பதிலாக வரி விகிதங்கள் 3%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 பிரிவு விகிதங்களாக அமல்படுத்தப்பட்டது.
28 சதவிகித வரி
ஜிஎஸ்டியில் 5 பிரிவு வரி விகிதங்கள் கொண்டுவரப்பட்டதை தொடக்கத்திலேயே பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருமே ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு முன்பு வாட் வரி விதிப்பு முறையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 18 மற்றம் 28 சதவிகிதம் என் உயர் வரி பிரிவில் கொண்டு செல்லப்பட்டன. இதனால் பல தொழில்கள் நலிவடையும் என்று அனைத்து தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
வரி விலக்குக்கு மாற்றம்
வர்த்தகர்களும் தொழில் துறையினரும், இது குறித்து தங்களின் ஆதங்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் முறையிட்டனர். அவரும் இதற்கு உரியு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதோடு பிரதி மாதமும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விரிவாக பேசி பெரும்பாலான பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகவும் 18 சதவிகிமாகவும், இன்னும் சில பொருட்களை வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களாகவும் மாற்றியமைத்தார்.
வரி வசூல் இலக்கை எட்டியது
இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் 23 பொருட்களுக்கான 28 சதவிகித உயர் வரி விகிதத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிரடியாக குறைத்து அறிவித்தார். அருண் ஜெட்லியின் இந்த தீவிர முயற்சியால், வரி வசூலானது, ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் இருந்ததைக் காட்டிலும் பின்னர் வரி குறைப்பினால் மாதாந்தோறும் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த இலக்கை எட்டியது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டினாலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உயர் வரி விகிதங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரி செலுத்த முடியாமல், படிப்படியாக நலிவடைந்து நிறுவனங்களை மூடிவிட்டமாக தெரியவந்துள்ளது.
வரி முறையில் மாற்றம்
தற்போது 28 சதவிகித வரி பிரிவில் ஆடம்பரப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட 28 பொருட்கள் மட்டுமே உள்ளன. இதையும் குறைக்க வேண்டும் என்று அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தொடர்ந்து வலியுறத்தி வந்தவண்ணம் இருந்தனர். இடையில் ஜிஎஸ்டி வரி முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் வரி விகித முறையில் எந்தவிதமான மாற்றமும் நடைபெறவில்லை.
மீண்டும் பாஜக ஆட்சி
கடந்த 2 மாதங்களாக ஜிஎஸ்டி வரி முறையில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யாததற்கு முக்கியமாக லோக்சபா தேர்தல் காரணமாக சொல்லப்பட்டது. தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பிரதமராக மோடியே மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். நிதியமைச்சராக அருண் ஜெட்லிக்கு பதிலாக நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நிதி நிர்மலா
நிதியமைச்சராக இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் வந்ததை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரும் வர்ததகர்கள் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஏதாவது மாற்றங்களை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்க முக்கியமாக நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சுமார் 6.4 முதல் 6.7 சதவிகிதம் வரையிலும் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் காரணமாகவே ரிசர்வ் வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதத்தை குறைத்தது. இதனால் தனி நபர் நுகர்வு அதிகரிக்கும் என்றும் வாகன கடன் அதிகரிக்கும் என்றும் அதோடு வாகன விற்பனையும் அதிகரிக்கக்கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வான விற்பனை படு மந்தமாகவே இருந்து வருகிறது. இதுவும் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஹாட்ரிக் வெற்றி
கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலானது 1 லட்சம் கோடி என்ற இலக்கை அநாயசமாக தொட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இதனடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி முறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசும் முன்வந்துள்ளதாக தெரிகிறது. எனவே வரும் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் 28 சதவிகித உயர் வரி பிரிவில் உள்ள 28 பொருட்களில் பெரும்பாலானவற்றை குறைந்த விகிதமுள்ள பொருட்களின் பட்டியலில் சேர்க்க ஜிஎஸ்டி கவுன்சிலும் தயாராகி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மிக அவசரம், மிக அவசியம்
நாம் இப்போது மிக அவசரமாக மிக அவசியமான ஒன்றை செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஜிஎஸ்டி வரியை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பல தரப்பிலிருந்தும் வரியை குறைக்கச்சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.