மும்பை: மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் 1,380 ஹெக்டேர் நிலத்தில் வெறும் 39 சதவீதம் மட்டுமே இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் உருவாக்கப்பட உள்ள பிரமதர் மோடியின் கனவுத் திட்டமான இந்த ரயில் திட்டத்திற்கு கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து நிலங்களையும் கையகப்படுத்த வேண்டும் என அரசு கூறியிருந்தது. ஆனால் அந்த காலக்கெடு முடிந்து இப்போது 6 மாதங்கள் ஆகிவிட்டன.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் மகாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி. தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. ஜப்பான் நாடு இந்த திட்டத்திற்கான மொத்த தொகையில் 88,000 கோடி ரூபாயை தருகிறது.
மீதமுள்ள 22,000 கோடி ரூபாய் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளால் பகிர்ந்து தரப்படும். இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நமது பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்தத் திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக குஜராத்தில் 350 ஹெக்டர் நிலமும் மகாராஷ்டிராவில் 1100 ஹெக்டேர் நிலமும் மொத்தமாக 1400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் பெரும்பான்மையானவை விவசாய நிலங்கள். அதனாலயே இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குஜராத்தில் 196 கிராமங்களும் மகாராஷ்டிராவில் 104 கிராமங்களும் இதில் பாதிக்கப்படுகின்றன. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மட்டும் 2500 குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும். இதுவரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் முறையாக அவர்களைச் சென்றடையவில்லை. அங்கும் போராட்டம் நடந்து வருகிறது.
குஜராத்தின் மற்றோரு மாவட்டமான வல்சாட்டில் விவசாயிகள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்துக்கான மொத்த நிலத்தையும் கையகப்படுத்த 2018 டிசம்பர் மாதம் வரைதான் காலக்கெடுவாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
நிலத்தை எப்படியும் கையகப்படுத்துவது என்பதற்காக நிலத்திற்கான இழப்பீட்டை 25% அதிகப்படுத்தித் தருவதாகவும் குஜராத் அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் விவசாயிகள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதோடு விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் முறை, சட்டத்துக்கு உட்பட்டு இல்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி (ஜேஐசிஏ) தீவிரமான முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்று விவசாயிகள் கடும் குற்ற சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த திட்டத்திற்காக தேவைப்படும் நிலங்களில் இதுவரை 39 சதவீதம் நிலங்களே கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் சேர்த்து 1,387 ஹெக்டேர் நிலம் தேவை. அதில் 537 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 940 ஹெக்டேர் தேவைப்படும் நிலையில், அங்கு 471 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 431 ஹெக்டேர் தேவைப்படும் நிலையில், 66 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தாத்ரா நகர் ஹவேலியில் 9 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், அங்கு இதுவரை ஒரு ஏக்கர் நிலம்கூட கையகப்படுத்தவில்லை.
குஜராத், மகாராஷ்டிரா இரு மாநிலங்களிலுமே மத்தியில் ஆளும் பாஜக தான் ஆண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை எழுதும் வேளையில் தமிழகத்தில் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நமது "ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ்" நமது விவசாயிகளிடம் எப்படி அத்து மீறி நடந்து கொண்டார்கள் மக்களை எப்படி தவிக்க விட்டார்கள், நீதிமன்றம் எப்படி கண்டித்தது என்பதெல்லாம் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.