டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து மூன்று மாதங்களாக 1 லட்சம் கோடியை தாண்டி ஹாட்ரிக் அடித்ததற்கு மாறாக தற்போது யூ-டர்ன் அடித்து ஜூன் மாதத்தில் வசூல் இலக்கானது 99 ஆயிரத்து 939 கோடி மட்டுமே வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் நடப்பு நிதியாண்டில் கடந்த மே மாதம் வரையிலும் 1 லட்சம் கோடியைத் தாண்டி வசூலானாலும் வரும் 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கம் பட்ஜெட் எதிர்பார்ப்பினால் கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் சரிவடைந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2018-19ஆம் ஆண்டின் மே மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு மே மாத வசூலானது சுமார் 6 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாத வசூலானது சுமார் 4.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. வரவிருக்கும் முழு பட்ஜெட்டை எதிர்நோக்கியே பெரும்பாலான தொழில் துறையினர் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.
இனி ஒரே வரிமுறை தான்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜூஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. வாட் வரி முதல் நுழைவு வரி என சுமார் 30க்கும் மேற்பட்ட வரி முறைகளை ஒழித்துவிட்டு அதற்கு மாற்றாக ஒரே நாடு ஒரே வரி முறை என்ற புதிய முழக்கத்தோடு சில குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
வசூல் இலக்கு ரூ.1 லட்சம் கோடி
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட போது ஒவ்வொரு மாதமும் நிச்சயம் 1 லட்சம் கோடி வரி வசூல் இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், தொடக்கத்தில் சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றம் சிக்கல் இருந்தாலும், பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டாலும் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் சுனக்கம் காட்டி வந்தனர்.
வரி விகிதங்கள் குறைப்பு
தொழில் துறையினரின் தயக்கத்தாலும், பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகமாக இருந்த காரணத்தினாலும் மாதாந்திர வரி வசூல் சுமார் 90 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. தொழில் துறையினரின் சிரமங்களை புரிந்து கொண்ட ஜிஎஸ்டி ஆணையமும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தது.
இடைக்கால பட்ஜெட்
அதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் சொன்னது போலவே கடந்த மார்ச் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்தது.
ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 577 கோடியை தொட்டு கடந்த நிதியாண்டில் நான்காவது முறையாக 1 லட்சம் என்ற இலக்கை தாண்டி சாதனை படைத்தது. அதே போல் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி வசூலாக சாதனை படைத்தது. ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நிதிமுறை நடைமுறையில் இருந்த போதிலும் அதைப் பற்றி கவலைப்படாமல் 1 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்தது.
ஹாட்ரிக் சாதனை
லோக்சபா தேர்தல் உச்சகட்டத்தை எட்டிய மே மாத ஜிஎஸ்டி வரி வசூலும் 1 லட்சத்து 289 கோடியை தொட்டு சாதனை படைத்தது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வரி வசூல் தொடர்ந்து 3 மாதங்கள் 1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்தது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ஏப்ரல் (ரூ.1,03,459), அக்டோபர் (ரூ.1,00,710), ஜனவரி(ரூ.1,02,503) மற்றும் மார்ச் (ரூ.1,06,577) என நான்கு மாதங்கள் மட்டுமே ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
ஜூன் மாத வசூல் சரிவு
லோக்சபா தேர்தல் நடைபெற்ற மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்ததால், கடந்த ஜூன் மாதமும் நிச்சயம் வரி வசூல் நிச்சயம் 1 லட்சம் கோடியை தாண்டிவிடும் என்று மத்திய நிதியமைச்சகம் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஜிஎஸ்டி வரி ரூ.99 ஆயிரத்து 939 கோடி மட்டுமே வசூலானது.
பட்ஜெட்டில் இலக்கு மாறுமா
மத்திய நிதியமைச்சகம் இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை தொடாமல் ஜிஎஸ்டி வரி வசூல் முதல் முறையாக ஏமாற்றியதால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டிலும் இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஜிஎஸ்டி வசூல் இலக்கும் திட்டமும் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடக்கி வாசிப்பு
கடந்த 2018-19ஆம் ஆண்டின் மே மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு மே மாத வசூலானது சுமார் 6 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாத வசூலானது சுமார் 4.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. வரவிருக்கும் முழு பட்ஜெட்டை எதிர்நோக்கியே பெரும்பாலான தொழில் துறையினர் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.
ஒருங்கிணைந்த வரி வசூல் அமோகம்
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் மாநில வரி வருவாயாக (SGST) 25 ஆயிரத்து 343 கோடி ரூபாயும், மத்திய அரசின் (CGST) பங்காக 18 ஆயிரத்து 366 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி வசூலாக(IGST) 47 ஆயிரத்து 772 கோடி ரூபாயும் (இறக்குமதிக்கான வரியான ரூ.21,980 கோடி உள்பட) வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.