டெல்லி: ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருவதால் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்டது போல் எதிர்பார்க்கும் வரி வசூலை நிச்சயமாக எட்டிவிடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலானது எதிர்பார்த்தது போல் 1 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டாமல் போனாலும், தற்போது ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருவதால், ஜிஎஸ்டி வரி வசூல் குறையும் என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஜிஎஸ்டி வரி வசூல் அவ்வப்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலானாலும், அவை சீராக உயராமல் அவ்வப்போது குறைந்து வருவதும் பின்னர் 1 லட்சம் கோடி என்ற இலக்கை தாண்டியும் வசூலாகி வந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் கூட, நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரல் (ரூ.1,03,459) அக்டோபர் (ரூ.1,00,710) ஜனவரி (ரூ.1,02,503) மற்றும் மார்ச் (ரூ.1,06,577) என நான்கு மாதங்களில் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1 லட்சம் கோடி என்ற மேஜிக் எண்ணைத் தொட்டது. இடைப்பட்ட மாதங்களில் வரி வசூல் எதிர்பார்த்த இலக்கை தொடமுடியாமல் போனது.
ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ச்சியாக நடப்பு 2019ஆம் ஆண்டில் மார்ச் (ரூ.1,06,577), ஏப்ரல் (ரூ.1,13,865) மற்றும் மே (ரூ.1,00,289) என தொடர்ந்து மூன்று மாதங்களாக ஹாட்ரிக் வெற்றியாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலாக சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தொடாமல் நின்றுவிட்டது.
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்தது போல் ரூ.1 லட்சம் கோடியை எட்டாமல் போனதற்கு குறிப்பாக 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை எதிர்பார்த்தே பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தக பரிமாற்றத்தை சற்று சுறுக்கிக்கொண்டுவிட்டதாக வரி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர்.
முக்கியமாக ஜிஎஸ்டியில் ஐந்து பிரிவு வரிகளாக இருப்பதை ஒன்று அல்லது இரண்டு பிரிவு வரிகளாக மாற்றம் செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றே அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருந்தனர். இதன் காரணமாகவே அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் வர்த்தகத்தை சற்று குறைத்திருந்தனர் என்றும் வரி நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்து போல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதனால் வரி வசூலும் நிச்சயம் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பது போல் எட்டக்கூடியதாகவே உள்ளது. அதைப் பற்றிய கவலை தேவையில்லாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் வரி வசூல் இலக்கானது சுமார் 24.60 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பணக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பெருந்தனக்காரர்களுக்கும் தங்கம் இறக்குமதி செய்வதற்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதால் வரி வசூலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி வசூலைப் பொருத்தவரையில் மத்திய அரசு கடுமையான இலக்கை நிர்ணயித்துள்ளதாகவே அனைவரும் தவறாக எண்ணிக்கொண்டனர். ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு மாறாக கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை தொடமுடியாமல் போனதே, அதற்கு என்ன செய்வது என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.