Saravana Bhavan-ன்னு ஒரு புது ஹோட்டல் வந்திருக்கு வரியா..?
எங்க..?
அதான்யா நம்ம லெக்சிங்டன் அவென்யூ 26-வது தெருவுல வரிசையா சாப்பாட்டுக்கு நிப்பாய்ங்களே.
அந்த கடையா..? அவிய்ங்க விளம்பரம் கூட பண்ணமாட்டாய்ங்களேப்பா..!
ஆமா மாப்ள, அதே கடை தான். அவிய்ங்க எதுக்கு விளம்பரம் பண்ணனும்..? ஏற்கனவே அவிய்ங்க ஹோட்டல் சாப்பாட்ட பத்தி ஊரே பேசிக்கிட்டு இருக்குறப்ப, எதுக்கு விளம்பரம் பண்ணனும்னு கேக்குறேன்.
ஆமாப்பா. இன்னக்கி தேதிக்கி (07 மே 2014)Saravana Bhavan கடை இந்தியாவுல மட்டும் 33 கடை, 12 வெளிநாட்டுல 47 கடைன்னு பெரிய சைவ உணவக சங்கிலியால வளர்ந்து வர்றாய்ங்க..! அப்புறம் எதுக்கு விளம்பரம்.
விளம்பரம் இல்லை
இப்படி நம்மூர் பத்திரிகைகள் பேசவில்லை... அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படித் தான் Saravana Bhavan பற்றிய தன் கட்டுரையைத் தொடங்குகிறது. இந்தியர்கள் வாய் வழியாகவும், சுற்றுலா பயணிகள் ஏற்கனவே சுவைத்திருக்கும் இந்திய உணவுகள் (குறிப்பாக தோசை) பற்றிய வாய் வழி செய்திகளால் மட்டுமே நியூயார்க் நகரில் உள்ள Saravana Bhavan சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என எழுதி இருக்கிறார்கள்.
அவர்கள் மொழி
Saravana Bhavan தோசையை "அத தோசன்னு சொல்லாத, வாய்ல அடி, அது தங்க பான் கேக்குன்னு சொல்லுயா" "வடை - இது வடையல்ல நன்கு பொரித்த மொறு மொறு டோக்நட் (Doughnut), "Saravana Bhavan மசால் தோசைக்காக சாகலாம்யா" என உச்சி முகர்ந்திருக்கிறது நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை. இப்படி Saravana Bhavan சாப்பாட்டு ஐட்டங்களை அமெரிக்கர்கள் தங்களுக்கு வசதியாக எதேதோ பெயர்களை வைத்து ருசித்துக் கொண்டிருப்பதையும் நம்மாள் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
உணவில் புரட்சி
Saravana Bhavan உணவகத்துக்குப் பின் ஒரு அழுத்தமான சமூக நீதி ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை போன்ற மிகப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியமான நகரத்தில் கூட உணவகங்களே இல்லை. காரணம் இந்திய கலாச்சாரத்தில் 20-ம் நூற்றாண்டு தொடக்க காலங்களில் வெளியில் சாப்பிடுவது தவறு என்கிற பார்வையிலேயே பார்க்கப்பட்டது என்கிறார், நியூ யார்க் பல்கலைக்கழகத்தில், உணவுக் கல்வி பேராசிரியரான கிருஷ்ணந்து ரே (Krishnendu Ray).
அதிகரித்த உணவகங்கள்
20-ம் நூற்றாண்டின் மத்தியில் சில முன்னேறிய வகுப்பினர்கள் தங்கள் சமூகத்துக்காக மட்டும் என சில உணவகங்களைத் திறந்தார்கள். இந்த முன்னேறிய வகுப்பினர்கள், மற்ற சமூகத்தினர்கள் சமைத்த உணவைச் சாப்பிடுவது தவறு என்கிற கருத்து ஆழமாக நிலவி வந்த காலம். ஆகையால் முன்னேறிய வகுப்பினர்களால், முன்னேறிய வகுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட உணவகங்கள் தான் அன்றைய சென்னையின் ஆரம்ப கால உணவகங்கள்.
ராஜகோபலுக்கு அனுமதி மறுப்பு
ராஜகோபால் அந்த முன்னேறிய வகுப்பைச் சாராதவர் என்பதால், முன்னேறிய சமூகத்தினரால் நடத்தப்பட்ட உணவகங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த கால கட்டத்தில் தான் சென்னையில் உணவகங்கள் துறை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. அந்த வளரும் ஹோட்டல் அதிபர்கள் பட்டியலில் 1981-ல் முருக பெருமானின் அருளோடு தொடங்கப்பட்டது தான் Saravana Bhavan.
ஜோசியம்
1981-ல் கே கே நகரில் Saravana Bhavan உணவகத்தை தொடங்குவதற்கு முன்பு கூட தன் ஜோசியரிடம் பிசினஸ் ஆலோசனை கேட்டிருக்கிறார் ராஜகோபால் அண்ணாச்சி. நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வியாபாரம் தொடங்கினால் ஜெக ஜோதியாக வருவீர்கள் எனச் சொல்லி இருக்கிறார். அவர் ஆலோசனைப் படி தான் அண்ணாச்சி உணவக வியாபாரத்தில் பிள்ளையார் சுழி போட்டு Saravana Bhavan-ஐத் தொடங்கி இருக்கிறார்.
நட்டம்
கே கே நகரில் கடை போட்டால் எல்லாம் முடிந்ததா..? வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் "சாம்பார்ன்னா இதான்யா சாம்பர்" என பாராட்டினால் போதுமா..? அசல் பிரச்னையே அப்போது தான் ஆரம்பம். ஆரம்பத்திலேயே உயர் தர எண்ணெய், நல்ல காய்கறிகள், பக்குவமாக அரைத்த மாவில் இட்லி தோசை என தரத்தில் சமரசம் இல்லாமல் சாப்பாடு போடுகிறார் நம் Saravana Bhavan அண்ணாச்சி. கடுமையான நட்டம். 1981-லேயே மாதம் 10,000 நட்டம் என்றால பார்த்துக் கொள்ளுங்கள்.
தரம் நிரந்தம்
இந்த பிரச்னையை சரி செய்ய, Saravana Bhavan-க்குள் ஒரு நிதியியல் ஆலோசகர் வருகிறார். வந்த உடன் கொஞ்சம் விலை மலிவான பொருட்களை வாங்கச் சொல்வது, ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்கச் சொல்வது என எல்லாம் நம் Saravana Bhavan அண்ணாச்சி ஒத்து வராத ஐடியாவை ஓதுகிறார். அடுத்த மாதமே நிதியியல் ஆலோசகருக்கு சம்பள பாக்கி கொடுத்து அனுப்பப்படுகிறார்.
விளையாட்டு
என்ன செய்து லாபம் பார்ப்பது என்கிற யோசனையில் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாச்சி. Saravana Bhavan என்கிற பெயர் அடுத்த சில மாதங்களில் மெல்ல மெல்ல சென்னை முழுக்க மன்னிக்கவும் மெட்ராஸ் முழுக்க பரவுகிறது. வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ஆகையால் செலவு குறைகிறது. மெட்ராஸ் போனா மதிய சாப்பாடு Saravana Bhavan-ல தான் என்கிற அளவுக்கு மக்கள் வயிற்றில் இடம் பிடித்தது அண்ணாச்சிக் கடை. Saravana Bhavan அண்னாச்சியும் லாபம் பார்க்கத் தொடங்குகிறார். வந்த லாபத்தை வைத்து அடுத்தடுத்து கிளைகளைத் தொடங்குகிறார்.
முதலாளி டூ அண்ணாச்சி
இந்திய தொழிலாளர் நலனை போற்றிப் பாதுகாத்தவர் ஜே ஆர் டி டாடா என்றால், தமிழக உணவகத் தொழிலாளர் நலனில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வந்தவர் நம் Saravana Bhavan அண்ணாச்சி என்றால் அது மிகை இல்லை. தன் உணவக ஊழியர்களுக்கு இலவச மருத்துவம், ஊழியர்களின் மகள்களுக்கான திருமணத்துக்கு நிதி உதவி, வீட்டுக்காக கொஞ்சம் நிதி என அண்ணனாக இருந்து ஊழியர்களைப் பார்த்துக் கொண்டார். இதனால் தொழிலாளர்கள் முதலாளி என்று அழைப்பதில் இருந்து அண்ணாச்சி என அழைக்கத் தொடங்க நம் ராஜகோபால் Saravana Bhavan அண்ணாச்சி ஆனார்.
சக போட்டியாளர்
ஒரு காலத்தில் இந்த உணவகத் துறை ஒரு சில சமூகத்துக்கு மட்டுமே கதவு திறந்தது. அந்தக் கதவுகளை உடைத்தெறிந்து எங்களைப் போன்ற மற்ற சமூகத்தினரும் இன்று இந்திய உணவு வியாபாரத்தில் இருக்கிறோம் என்றால் அதில் Saravana Bhavan அண்ணாச்சி ராஜகோபாலின் பங்கு மிகப் பெரியது எனப் புகழ்கிறார் முருகன் இட்லிக் கடையின் உரிமையாளர் மனோகரன். இத்தனைக்கு முருகன் இட்லிக் கடை நம் Saravana Bhavan-க்கு நேரடி போட்டியாளர் என்பது கவனிக்கத்தக்கது.
McDonalds
1990-களில் ஒரு நாள் மதியம், சென்னை மயிலாப்பூர் Saravana Bhavan உணவகத்துக்கு, நியூ யார்க் டைம்ஸ் சார்பாக Rollo Romig என்கிற நிருபர் வருகிறார். இவரோடு மெக் டொனால்ட்ஸ் நிறுவன அதிகாரிகளும் வந்ததாகச் சொல்கிறார்கள். மொத்த Saravana Bhavan உணவகத்துக்குள் ஒரே ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்திருக்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2000 - 4000 பேர் வந்து சாப்பிடும் இடத்தில் ஒரே ஒரு குளிர் சாதனப் பேட்டி. அதிலும் அன்றைக்கான காய்கறிகள் மட்டும் தான் இருக்கிறது. இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு அவர்கள் எவ்வளவு ப்ரெஷ்ஷாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கிறார்கள் என வியந்து போனார்களாம்.
அன்றைய நாளுக்கானது
வேலைகள் எல்லாம் முடிந்த பின் ஓய்வாக நம் Saravana Bhavan அண்ணாச்சி, வந்தவர்களுக்கு மினி வகுப்பெடுத்தாராம். இட்லி தோசைக்கு மாவை தினமும் அறைப்பது, தினமும் காய்கறிகளை வாங்கி வருவது என எல்லாவற்றையும் சொன்னாராம். வந்தவர்களின் பல சந்தேகங்ளுக்கு அண்ணாச்சி ராஜகோபாலின் பிசினஸ் மாடலில் ஒரு நல்ல பதில் இருந்ததாக சொன்னார்களாம்.
ஸ்டாக் சரி செய்தல்
ஒரு வாரத்துக்கு தேவையான அனைத்தையும் வாங்கிப் போட்டு வேலை செய்யும் மெக்டொனால்ட்ஸ் ஒரு பக்கம், தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்து வியாபாரம் பார்க்கும் Saravana Bhavan அண்ணாச்சியை மறு பக்கம் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள். தமிழகம் ஒரு நல்ல உணவக தொழிலதிபரை இழந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.