டெல்லி: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரையிலும் ஜிஎஸ்டி வரி மோசடி செய்திருப்பதாக மறைமக வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக அவரை கைது செய்த மறைமுக வாரிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை உள்ளூர் நிதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்தனர். மேற்படி நபர் சுமார் போலியாக 90 நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் ஜிஎஸ்டி வரி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட் வரிமுறையில் தான் அதிக அளவில் முறைகேடுகள் நடக்கின்றன என்றும், இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு முறையாக வரவேண்டிய வரி வருவாய் வேறு வழிகளில் சென்று கருப்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது என்று சொல்லி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் விதிமுறைகள் அனைத்துமே தெள்ளத் தெளிவாக உள்ளதால், இதில் போலியாக நிறுவனங்களை உருவாக்குவது, அதன் மூலம் டம்மியான இன்வாய்ஸ்களை தயாரித்து வரி மோசடி எல்லாம் செய்யமுடியாது, அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று மத்திய அரசும் உத்தரவாதம் அளித்தது.
மற்ற நாடுகளைப் போல் நம் நாட்டிலும் புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டால் விலைவாசிகளும் குறையும், பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் என்று மத்திய அரசு அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் ஜிஎஸ்டி வரிமுறையை ஏற்றுக்கொண்டு முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகின்றனர்.
இதோ, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் வரையிலான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்கள் மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி முழு ஆண்டுக்கான ரிட்டன்களையும் மத்திய ஜிஎஸ்டி ஆணையத்தின் தணிக்கைக் குழு விரிவாக ஆய்வு நடத்தியது.
தணிக்கைக் குழு நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலியான பில்களை தயாரித்து அதன் மூலம் சுமார் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு மோசடி நபர்களிடம் இருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரையிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மறைமுக வரிகள் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும் ஜிஎஸ்டியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், தணிக்கை தொடரும் என்றும் மறைமுக வரிகள் வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போலி பில்களை தயாரித்து சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை வரி மோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஷிர்ஷா (Sirsa) மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சுமார் 90 போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி பில்களை தயாரித்து கொள்முதல் செய்ததாகவும், உள்ளீட்டு வரிப் பயனை பெறுவதற்காகவே போலி விற்பனை பில்களை தயாரித்து அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்துள்ளதாக மறைமுக வரிகள் வாரியத்தின் புலனாய்வு கண்காணிப்புக் குழு (The Directorate General of GST Intelligence-DGGSTI) கண்டுபிடித்தது.
இந்த புலனாய்வுக் குழுவானது, கறுப்புப் பணம் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையின் கீழ் நியமிக்கப்பட்டு குழுவாகும்.
ஜிஎஸ்டி வரி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கிட்டத்தட்ட 110 கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளையும், கையொப்பமிடாத காசோலைகளையும், 173 வங்கிக் கணக்கு ஆவணங்களும் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்கு ஆவணங்கள் அனைத்திலும் டெல்லி முகவரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் முடிவில் மேற்படி நபர் உள்ளூர் நீதிமன்ற நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மறைமுக வரிகள் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.