டெல்லி: இந்தியாவில் ஒரு பக்கம், மத்திய அரசு வியாபாரிகளுக்கு சாதகமான சூழல்களைக் கொண்டு வர போராடிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில வருடங்களாக வியாபாரம் செய்ய தகுந்த சூழல் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் அமைப்பு சாரா வியாபாரங்களை பெரிய அளவில் பாதிக்கும் வகையில் பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி என பல அழுத்தங்களைக் கொடுத்துவிட்டது. அதே போல அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளான ஆட்டோமொபைலைக் கூட, தவறான கொள்கைகள் மற்றும் தெளிவற்ற கொள்கைகளால் குதறிப் போட்டது போல தற்போது தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில் சில துறைகளில் வியாபாரமே செய்ய முடியாத அளவுக்கு அழுத்தத்தை உணர்ந்து கொண்டு இருக்கிறது என்றால் அது விமான சேவை துறை தான். இதற்கு சமீபத்தில் தன் கடையை இழுத்து மூடிய ஜெட் ஏர்வேஸ் ஒரு ஆகச் சிறந்த உதாரணம். இப்போது இந்த சிக்கலுக்கு இடையில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்று காசு பார்க்க திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு. ஆனால் வாங்கத் தான் ஆள் இல்லை. ஏற்கனவே சில முறை ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சித்து முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதுடன் மட்டும் நின்று விடாமல், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் கண்டெயினர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களையும் விற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்களை எல்லாம் ஏதோ அடுத்த சில வருடங்களில் விற்கப் போவதில்லை. அடுத்த சில மாதங்களில் விற்கப் போகிறார்களாம். குறிப்பாக 2019 - 20 நிதி ஆண்டு முடிவுக்குள் விற்று மத்திய அரசின் வருவாயை அதிகரிக்கப் பார்க்கிறார்களாம்.
ஏற்கனவே மத்திய அரசுக்கு போதுமான வருவாய் இல்லை, நேரடி வரிகள் வசூலில் பெரிய வளர்ச்சி இல்லை. அதே கதை தான் ஜிஎஸ்டியிலும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகள் வேறு சுமார் 5 சதவிகிதம் வரை குறைத்தாகி விட்டது. ஆக நிறுவனங்களை விற்று தான் பிழைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு படு தெளிவாக இருக்கிறது போல. அரசு நிறுவனங்களை விற்பது சுலபம். ஆனால் அதைத் தொடங்கி சரியாக வழிநடத்தி லாபம் பார்ப்பது தான் கடினம். அரசு புரிந்து கொள்ளுமா எனத் தெரியவில்லை..!