டெல்லி : CMIE அறிக்கையின் படி, பாஜக ஆளும் 10 மாநிலங்களில் 6 மாநிலத்தில் வேலையின்மை அதிகம் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகளவில் வேலையின்மை கொண்ட இந்தியாவின் 10 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் பாஜகாவால் ஆளப்படுகின்றன என்றும், இல்லையெனில் பாஜகவும் கூட்டணி வைத்த பங்காளிகள் ஆளும் மாநிலமாகவும் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சி,எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில், நாட்டின் வேலை சூழ்நிலையை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
அப்படி என்ன தான் சொல்கிறது சி.எம்.ஐ.இ
சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதிக வேலையின்மை விகிதத்தில் 31.2%வுடன் முதலிடத்தில் இருப்பது திரிபுரா தான், இதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 20.4%வுடனும், ஹரியானா 20.3%, ஹிமாச்சல பிரதேசம் 15.6%வுடனும், பஞ்சாப் 11.1%வுடனும், ஜார்கண்ட் 10.9% பீகார் 10.3%வுடனும், சட்டிஸ்கர் 8.6%வுடனும், உத்திரபிரதேசம் 8.2%வுடனும், ராஜஸ்தான் 7.4%வுடனும் சிக்கிம் 6.4%வுடனும், குஜராத் 6.2%வுடனும், மேற்கு வங்கம் 6% வேலையின்மையுடனும், இதே கேரளாவில் 5.4%வுடனும், கர்நாடாகவில் 3.3%வுடனும், இதே தமிழகத்தினை பொறுத்த வரையில் 1.8% வேலையின்மையும் உள்ளதாகவும் சி.எம்.ஐ.இ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் பகுதி
இவ்வறிக்கையில் பாஜக ஆளும் பகுதியான திரிபுரா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வேலையின்மையே நிலவுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மஹாராஷ்டிராவில் 5.7% வேலையின்மை நிலவி வருகிறது. குறிப்பாக ஹரியானவில் மூன்றாவது இடத்தில் 20.3%வுடனும், இங்கு சுமார் 19 லட்சம் பேர் வேலையின்றி இருப்பதாகவும், இதில் 16 லட்சம் பேர் பள்ளிப்படிப்புடனும், இதே 3.8% லட்சம் பேர் கல்லூரி படிப்பை முடித்தவர்களாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3 வருடத்தில் இல்லாத அளவு அதிகரிப்பு
சி.எம்.ஐ.இ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள வேலையின்மை குறித்தான அறிக்கையில், மூன்று வருடத்தில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையின்மை 8.4%மாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆகஸ்ட் 2018வுடன் ஒப்பிடும் போது 2% அதிகரித்துள்ளதாகவும், இது இந்தியா அதிகளவிலான வேலை நெருக்கடியை சந்திருப்பதையே சுட்டிக் காட்டுகிறது.
45ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசம்
இதே NSSOவின் அறிக்கையின் படி, கடந்த 2017 - 2018ம் ஆண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு வேலையின்மை விகிதம் 6.1% அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த 1972- 73ல் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையினை எட்டியது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2011 - 12 மற்றும் 2017 - 18க்கு இடையே தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 மில்லியனாக சுருங்கி விட்டதாகவும், இதே வேலை தேடும் மக்கள் எண்ணிக்கை கடந்த 2011 - 12ல் 55.9% மாக இருந்ததாகவும், இதே 2017 - 2018ல் 49.5%மாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முடிவு தான் என்ன?
ஆட்டோமொபைல் துறை, எஃப்.எம்.சி.ஜி துறையில் மோசமான தேவை காரணமாக விற்பனை குறைந்து வருகிறது. இதனால் பணி நீக்கம் தொடர்ந்து வருகிறது. நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மந்த நிலை, இந்த வேலை சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என்றும் கூறலாம். இதை மேம்படுத்த அரசு கார்ப்பரேட் வரியை குறைத்தல் மற்றும் ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் தொழில்களுக்கான தொகுப்புகளை அறிவித்தல் உள்ளிட்ட மந்தமான பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வந்த போதிலும், இதற்கான முடிவுகள் தான் இன்னும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.