கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தான் பொருளாதார பத்திரிகைகள் மற்றும் வணிக செய்திகளில் முக்கிய இடம் பிடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த வங்கி மீது ஆர்பிஐ பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
வங்கிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைப் போல, இந்த வங்கியின் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்தது ஆர்பிஐ. அதன் பின் பலத்த எதிர்ப்புக்குப் பின் அந்த தொகை 10,000 ரூபாயாகவும், இப்போது 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதோடு இந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கொடுத்திருக்கும் மொத்தக் கடன் தொகை 8,880 கோடி ரூபாய் தானாம். ஆனால் அதில் சுமார் 6,500 கோடி ரூபாயை ஹெச் டி ஐ எல் (HDIL) என்கிற இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு மட்டுமே கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மொத்த கடன் தொகையில் ஹெச் டி ஐ எல்-க்கு மட்டும் கொடுத்திருக்கும் கடன் அளவு சுமார் 70 சதவிகிதம் என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் வகையில் HDFC வங்கியின் தலைவர் தீபக் பரேக், நிதி சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை திறந்து வைக்கும் போது பேசி இருக்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை, இந்த நிதித் துறையில், சாமானிய மக்களின் உழைப்பில் சேர்த்த பணத்தை தவறாக பயன்படுத்துவதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை. நம்மிடம் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், கடன்களை வாராக் கடன்களாக எழுதவும் வழி இருக்கின்றன. ஆனால் நேர்மையான மக்களின் சேமிப்பு பணத்தைக் காப்பாற்ற நம்மிடம் வழி இல்லாதது நியாயமற்றது" எனச் சொல்லி இருக்கிறார். அந்த இடத்தில் HDFC வங்கித் தலைவர் தீபக் பரெக் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியைச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு நிதித் துறையில் நம்பிக்கை தான் எல்லாவற்றுக்கும் முதுகெலும்பு. எப்போதும் கொள்கைகளையும், மதிப்புகளையும் ஒருவர் குறைத்து எடை போடக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார் ஹெச் டி எஃப் சி தலைவர் தீபர் பரேக்.