உலக இ காமர்ஸ் துறையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் அமேசான் நிறுவனம், இப்போது இந்தியாவின் உணவு டெலிவரி வியாபாரத்திலும் களம் இறங்க இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தன் வலைதளத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் தீபாவளி பண்டிகை காலத்துக்குள் அமேசான் நிறுவனம் தன்னுடைய உணவு டெலிவரி செயலியை தொடங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ எப்படி அதிரி புதிரி ஆஃபர்களை எல்லாம் களம் இறக்கி, ஜியோ சேவை நடைமுறைக்கு வந்து 3 வருடத்துக்குள், இந்தியாவின் மொத்த டெலிகாம் சந்தையில் சுமார் 30 சதவிகிதத்தை, தன் கைக்குள் போட்டுக் கொண்டதோ, அதே போல, இந்திய உணவு டெலிவரி துறையிலும் ஒரு பெரிய பகுதி வியாபாரத்தை வளைத்துப் போட துடித்துக் கொண்டு இருக்கிறது அமேசான்.
வழக்கம் போல ஏகப்பட்ட ஆஃபர்கள், தள்ளுபடிகள் எல்லாவற்றையும் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்வது, உணவகங்களில் இருந்து குறைந்த கமிஷன் தொகையை மட்டுமே வாங்குவது என பல திட்டங்களை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
அமேசான் நிறுவனம் தன்னுடைய ரீடெயில் டெலிவரிக்கு பயன்படுத்தும் மனித வளத்தை, அப்படியே இந்த உணவு டெலிவரி வியாபாரத்துக்கும் பயன்படுத்தப் போகிறார்களாம். இந்த திட்டம் சோதனை அடிப்படையில் முதலில் பெங்களூரில் மட்டும் களம் இறக்கப் போகிறார்களாம். இந்த சோதனையின் வழியாக தங்கள் தவறுகளை சரி செய்து கொண்டு மெல்ல மற்ற இந்திய நகரங்களுக்கு தங்கள் உணவு டெலிவரி வியாபாரத்தை பரப்ப இருக்கிறார்களாம்.
தற்போது சொமேட்டோ, ஸ்விக்கி, உபர் ஈட்ஸ் போன்றவர்கள் உணவகங்களில் இருந்து 20 - 30 சதவிகித தொகையை கமிஷனாக பெற்றுக் கொண்டு உணவுகளை டெலிவரி செய்து கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் அமேசானோ வெறும் 6 - 10 சதவிகிதம் மட்டுமே கமிஷனாக வாங்க இருக்கிறார்களாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உணவு டெலிவரி சந்தை சுமாராக 16 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதாம். வரும் 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உணவு டெலிவரி சந்தை சுமாராக 17.02 பில்லியன் டாலரைத் தொடுமாம். எனவே இவ்வளவு பெரிய சந்தையில் களம் இறங்கி ஒரு பெரிய வியாபாரத்தைச் செய்ய அமேசான் தயாராகிக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.