இந்தியாவின் மிகப் பெரிய கார்பப்ரேட் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. உலக ஐடி நிறுவனங்களில் கூட இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என எத்தனையோ இந்திய இளைஞர்கள் இப்போதும் கம்ப்யூட்டரும் கையுமாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமே சில பெரிய முறைகேடு வேலைகளைச் செய்து, தன் நிகர லாபத்தைக் உயர்த்திக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையே சிதைந்து விடும் போலிருக்கிறது. இப்போது அப்படி ஒரு புகாரைத் தான் சில ஊழியர்கள் இன்ஃபோசிஸ் அதிகாரிகள் மீது வைத்திருக்கிறார்கள்.
சரி அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்கள்..? யார் இந்த மோசடிகளைச் செய்வதாகச் சொல்கிறார்கள்..? யார் இந்த விவரங்களை வெளியிட்டது..? இந்த முறைகேட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதில் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.
இவர்கள் தானாம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் தான் செய்து இருக்கிறார்களாம். இப்படி இன்ஃபோசிஸ் உயர் அதிகாரிகள் மீது பொது வெளியில் குற்றம் சுமத்துவது சில இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களே தான் என ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
குற்றச்சாட்டு
அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக முறையற்ற மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள், இந்த நேர்மையான ஊழியர்கள். கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று தான் இந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, இந்த நேர்மையான ஊழியர்கள், கடிதம் எழுதி இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் IANS செய்தி நிறுவனத்துக்கு இந்த கடிதம் கிடைத்ததாம்.
மோசடி விளக்கம்
கடந்த காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விசா கட்டணச் செலவுகள் போன்ற பல செலவுகளை, முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அழுத்தம் கொடுத்து இருக்கிறார்களாம். உதாரணமாக விசா கட்டணத்துக்கு 10,000 ரூபாய் செலவு செய்து இருந்தால், 5,000 அல்லது 6,000 ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது. இப்படி செலவுகளைக் குறைத்தால் லாபம் கூடத் தானே செய்யும். அதைத் தான் இன்ஃபோசிஸ் நிறுவனமும் செய்து இருக்கிறது என்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள். இதெல்லாம் ஜு ஜு பி என்கிற ரேஞ்சில் ஒரு மெகா மோசடியைச் செய்து இருக்கிறது இன்ஃபோசிஸ் என்கிறார்கள் அந்த ஊழியர்கள்.
350 கோடி முறைகேடு
இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சில ஒப்பந்தம் மூலமாக 50 மில்லியன் டாலர் (சுமார் 350 கோடி ரூபாய்) பணம் வந்திருக்கிறது. வந்த போது அதை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் சில பல காரணங்களுக்காக வந்த 50 மில்லியன் டாலரை மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வந்த 50 மில்லியன் கையில் இல்லை. இந்த இடத்தில் தான், 50 மில்லியனை திருப்பிக் கொடுத்ததை கணக்கில் கொண்டு வர வேண்டாம் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் சொல்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள்.
என்ன மோசடி
ஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும்.
மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம்.
உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15.
இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். இன்ஃபோசிஸ் இரண்டையும் செய்து இருக்கிறது. 1. விசா கட்டணம் போன்ற பல செலவுகளை முறையாக கணக்கில் கொண்டு வரவில்லை எனவே இன்ஃபோசிஸ் சொல்லும் கணக்குப் படி செலவு குறைந்து இருக்கிறது. 2. வராத 50 மில்லியன் டாலர் (350 கோடி ரூபாய்) வருமானத்தை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ஆக இன்ஃபோசிஸ் கணக்குப் படி வருமானம் அதிகரித்து இருக்கிறது.
ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள்
மேலே சொன்ன 50 மில்லியன் டாலர் விவகாரம் போல பல முக்கிய விவரங்களை ஆடிட்டர்களுக்கோ அல்லது இயக்குநர் குழுவுக்கோ கூட தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டார்களாம். எனவே ஆடிட்டர்களும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொடுத்துவிட்டார்களாம். குறிப்பாக பெரிய ஒப்பந்தங்களில் இருந்து வரும் வருமானங்களில், பல முறைகேடுகள் செய்து இருப்பதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள்.
அமெரிக்காவுக்கு கடிதம்
செப்டம்பர் 20, 2019 அன்று இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் வராததால், இந்த நேர்மையான ஊழியர்கள், கடந்த அக்டோபர் 03, 2019 அன்று அமெரிக்காவில் இருக்கும் Whistleblower Protection Programme அலுவலகத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்களாம். அந்தக் கடிதத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் கணக்கு வழக்குகளில் கடந்த இரண்டு காலாண்டுகளாக, வேண்டும் என்றே மோசடி செய்திருப்பதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்களாம்.
சலீல் பரேக்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சலீல் பரேக், பல பரிசீலனை மற்றும் அனுமதிகளை முறையாக மேற்கொள்ளவில்லையாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கும், சில பல டீல்களுக்கு அப்ரூவல்களை இ மெயிலில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். இவை எல்லாவற்றையும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டும் எண்ணத்துடன் செய்திருப்பதாகவே சொல்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள்.
நிலஞ்சன் ராய்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (CFO) என்கிற முறையில், நிறுவனத்தில் நடக்கும் தவறுகளை முறையாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நிலஞ்சன் ராய் அதை சி இ ஓ வழியில் மறைத்துவிட்டார் எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள். அதோடு முதன்மைச் செயல் அதிகாரி, இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதையும் இந்த நேர்மையான ஊழியர்கள் தங்கள் கடிதத்தில் சொல்லி இருக்கிறார்களாம்.
இன்ஃபோசிஸ் தரப்பு
பிரச்னை தங்கள் கையை மீறி, அமெரிக்காவில் இருக்கும் Whistle blower Protection Programme வரை பரவிய பின், இப்போது தான் பதில் சொல்லத் தொடங்கி இருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவன வழக்கப்படி, இந்த புகாரை, தங்கள் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்களாம். அதோடு இந்த புகார் தொடர்பாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் whistle blowers policy-க்கு உட்பட்டு கையாளப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் இன்ஃபோசிஸ் தரப்பினர்கள்.
இத்தனை பெரிய நிறுவனத்திலேயே மோசடி செய்கிறார்கள் என்றால், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான நம்பிக்கை ஓரே அடியாக தகர்க்கப்படுகிறது. இதை தயவு செய்து கார்ப்பரேட் நிறுவனங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.