இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிதியியல் புரட்சியின் வாயிலாக உருவான பல வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 94 வருடம் பல தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் சேவை அளித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அதீத வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வங்கியையும், வாடிக்கையாளர்களின் பணத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் வலிமையான வங்கியுடன் சேர்க்க முடிவு செய்தது.
இதன் படி லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் DBS வங்கியின் இந்தியக் கிளையுடன் சேர்க்க முடிவு செய்த நிலையில், இரு நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பின் மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS இந்திய வங்கிகளை இணைக்க ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் கிளை DBS வங்கி கிளைகளாக மாறின.
பங்குகள்
ஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு முதலீட்டாளர்களுக்கு வங்கி இணைப்பின் காரணமாக எவ்விதமான பணமும் கிடைக்காத நிலையில் நஷ்டமாக மாறியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBIL வங்கிகள் முழுமையாக இணைக்கப்பட்ட பின்பு பங்குச்சந்தையில் இருந்து லட்சுமி விலாஸ் வங்கி நீக்கப்படுகிறது.
பத்திரங்கள்
இதையடுத்துத் தற்போது லட்சுமி விலாஸ் வங்கி Tier-II Basel III பத்திரங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் செக்ஷன் 45 கீழ் பத்திரங்களை ரத்து செய்து விட்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்ட கணக்காக அறிவிக்கக் கோரிக்கை வைத்துள்ளது லட்சுமி விலாஸ் வங்கி.
வங்கி ஊழியர்கள் அமைப்பு
லட்சுமி விலாஸ் வங்கி வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைத்திருப்பது பலர் இந்திய வங்கித்துறைக்குச் சாதகமா ன வாய்ப்பாகக் கருதி வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் அமைப்பான AIBEA இந்திய சந்தைக்குள் நுழைய வெளிநாட்டு
வங்கிகளுக்கு இது குறுக்கு வழியாக அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர்.
2வது முயற்சி
2018ஆம் ஆண்டு DBS வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்றி முதலீடு செய்ய முயற்சி செய்தது. இப்போதைய காலகட்டத்தில் DBS வங்கி ஒரு பங்கை 100 முதல் 150 ரூபாய் விலையில் சுமார் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முன்வந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறை விதிகள் காரணமாகப் பங்குகளைக் கைப்பற்றும் திட்டத்திற்கு நிராகரிப்பு செய்தது.
இந்நிலையில் DBS வங்கி தனது 2வது முயற்சியில் லட்சுமி விலாஸ் வங்கியை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
வரலாறு
1926ல் கரூரில் ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 தொழிலதிபர்கள் இணைந்து உருவாக்கிய இந்த வங்கி, 94 வருடத்திற்குப் பின் வெறும் வரலாறாக மாறியுள்ளது. இனி லட்சுமி விலாஸ் வங்கி பெயரில் பங்குகளோ, பத்திரங்களோ,
வங்கி கிளைகளோ, வங்கி நிர்வாகமோ என எதுவும் இருக்காது.