இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் நிறுவனமான ABG ஷிப்யார்டு, குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமானம் தளத்தை வைத்திருந்தாலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
மத்திய அரசு கப்பல் கட்டுமானம் மற்றும் ஏற்றுமதியில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ள நிலையில் ABG ஷிப்யார்டு மிகப்பெரிய தொகையை மோசடி செய்துள்ளது.
ABG ஷிப்யார்டு நிறுவனம்
ABG ஷிப்யார்டு நிறுவனம் சுமார் 28 வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் சுமார் 22,842 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்று மோசடி செய்து. இந்நிலையில் இந்த 22,842 கோடி ரூபாயை வங்கிகளிடம் இருந்து ஏமாற்ற ABG ஷிப்யார்டு நிறுவன தலைவர்கள் செய்த தில்லுமுல்லு விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி
விஜய் மல்லையா, நீரவ் மோடி எனப் பல பெரும் தலைகள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததைத் தொடர்ந்து தற்போது இந்தப் பட்டியலில் ABG ஷிப்யார்டு நிறுவனம் சேர்ந்துள்ளது. சிபிஐ ABG ஷிப்யார்டு நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ABG ஷிப்யார்டு நிறுவனத்தின் 22,842 கோடி ரூபாய் மோசடி தான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்காக விளங்குகிறது.
98 போலி நிறுவனங்கள்
சுமார் 28 வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை ABG ஷிப்யார்டு நிறுவனம் சுமார் 60 இந்திய நிறுவனத்திற்கும், 38 வெளிநாட்டு நிறுவன கணக்குகளுக்கும் மாற்றியுள்ளது தெரிவித்துள்ளது. சுமார் 98 போலி நிறுவன கணக்குகளுக்கு இந்தத் தொகை மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் தான் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி-யும் கடனை போலி நிறுவனத்திற்கு மாற்றி மோசடி செய்தனர்.
முக்கியக் குற்றவாளிகள்
ABG ஷிப்யார்டு நிறுவனத்தின் மீதான 22,842 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் இந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நெவெடியா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமலாக்க துறை
தற்போது சிபிஐ மட்டும் அல்லாமல் அமலாக்க துறையும் இந்நிறுவனம் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வெளிநாட்டில் இருக்கும் 38 நிறுவனங்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டும் பணியைத் துவங்கியுள்ளது.
லுக்அவுட் நோட்டீஸ்
இந்தக் கடன் மோசடி வழக்கில் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் தேடப்பட்டு வரும் நிலையில், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.