பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு தரும் மதிய உணவு திட்டத்தில் ரூபாய் 11.40 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக சேவகர் என்ற போர்வையில் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக அவரது குடும்பத்தினர் மற்றும் வங்கி அதிகாரிகளும் இருந்துள்ளனர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் தரும் அரசின் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.11.40 கோடி மோசடி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் மதிய உணவு திட்டத்தில் ரூபாய் 11.4 கோடி மோசடி செய்த பள்ளி முதல்வர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்
ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத் என்ற பகுதியில் வசிக்கும் சந்திரகாந்த் சர்மா என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இணைந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தியதாகவும், இந்த மோசடிக்கு அந்த நிறுவனத்தை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி விலைப்பட்டியல்
சர்மா நடத்தி வந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் போலியான விலைப்பட்டியல் மற்றும் பில்களை சமர்ப்பித்து பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் நடத்திய போலியான தன்னார்வு தொண்டு நிறுவனத்தை பதிவு செய்து தனது துறை, வங்கி அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உதவியுடன் அவர் இந்த மோசடி செய்ததாகவும், இதுவரை அவர் மோசடி செய்த மொத்த தொகை ரூபாய் 11.40 கோடி என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழல் வழக்கு
இதனை அடுத்து தலைமை ஆசிரியர் சந்திரகாந்த் சர்மா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனம்
2007ஆம் ஆண்டு ஷர்மா, ஃபிரோசாபாத்தில் உள்ள ஷிகோஹாபாத்தில் சரஸ்வத் அவசிய சிக்ஷா சேவா சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு செய்தார். அவரே அந்த போலி தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும் அவரது தாயார் மேலாளர் மற்றும் செயலாளராகவும் அவரது மனைவி பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒருசில பதவிகளை கொடுத்துள்ளார்.
போலி பெயர்
மேலும் அவர் சுனில் குமார் என்பவரை ஷர்மா சரஸ்வத் அவசிய சிக்ஷா சேவா சமிதியின் பொருளாளராக நியமனம் செய்தார். ஆனால் சுனில்குமார் என்ற ஒரு நபரே இல்லை என்றும் அது சர்மாவின் போலி பெயர் என்றும் காவல்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள்
இதுவரை நடந்த காவல்துறையினரின் விசாரணையில் சர்மா மதிய உணவு திட்டத்தில் ரூபாய் 11.40 கோடி மோசடி செய்ததாகவும், மோசடி செய்த பணத்தில் பல முக்கிய சொத்துக்களை வாங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மோசடி செய்யும் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயருக்கு மாற்றிய பிறகு அவர் பல சொத்துக்களை வாங்க அந்த பணத்தை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
குற்றப்பத்திரிக்கை
ஜூன் 27ஆம் தேதியன்று சர்மாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.