நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடனில் மூழ்கியிருக்கும் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டது. இதன் படி நீண்ட காலமாக ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் 14 தேதி விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பல விமான நிலையங்களைக் கைப்பற்றியுள்ள அதானி குழுமம் ஏர் இந்தியாவை வாங்கும் எனக் கருத்து நிலவியது. ஆனால் அதானி விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கவில்லை.
ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான விருப்ப விண்ணப்பங்களைக் கோரப்பட்ட கடைசி நாளில் டாடா குழுமம் விருப்பத்தைத் தெரிவித்த நிலையில் டாடா உடன் அமெரிக்க நிறுவனம் போட்டிப்போடக் களத்தில் இறங்கியுள்ளது.
6வது முயற்சி
மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய 6வது முறையாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்காக அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் இத்திட்டத்திற்கும் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
100 சதவீத பங்கு விற்பனை
தற்போது மத்திய அரசு ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியாவின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிறுவனமான AI-SATS பிரிவில் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இதற்காக விருப்ப விண்ணப்பத்தைப் பெற்றுள்ளது.
60,074 கோடி ரூபாய்க் கடன்
மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் ஏர் இந்தியாவின் மொத்த கடன் மதிப்பு 60,074 கோடி ரூபாய், இதில் 23,286.5 கோடி ரூபாய்க் கடனை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏற்க வேண்டும். எஞ்சியுள்ள தொகையை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்றுக்கொள்ளும்.
ஏர் இந்தியா
ஒரு காலத்தில் இந்திய விமானப் போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏர் இந்தியா வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், தனியார் நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியின் காரணமாகவும் தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
அமெரிக்க நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஏர் இந்தியாவின் 219 ஊழியர்கள் குழு மற்றும் அமெரிக்காவின் Interups Inc என்னும் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள்
ஏர் இந்தியாவின் ஊழியர்கள் குழு ஒன்று தலா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் Interups Inc நிறுவனத்துடன் சேர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி ஊழியர்கள் 51 சதவீத பங்குகளையும், Interups Inc நிறுவனம் 49 சதவீத பங்குகளை நிர்வாகம் செய்யும்.
டாடா குழுமம்
டாடா குழுமம் விஸ்தாரா நிறுவனத்தின் வாயிலாக ஏர் இந்தியாவைக் கைப்பற்றத் திட்டமிட்ட நிலையில் கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் தற்காலிகமாக மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், டாடா நிறுவனம் தனியொரு நிறுவனமாக ஏர் இந்தியாவைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
விஸ்தாரா ஏர்லையன்ஸ்
டாடா குழுமம் தனது தனி விமானச் சேவை நிறுவனமான விஸ்தாரா மூலம் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற முடிவு செய்து கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்ட நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லை முடியாத காரணத்தால் டாடா தனி ஆளாக ஏர் இந்தியாவைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்
டாடா - சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை அடையாத நிலையிலும் டாடா ஏர் இந்தியாவைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
டாடாவின் முயற்சி வெற்றிகரமான முடியும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூடுதல் முதலீடு செய்து கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது.
ஏர் இந்தியா நிர்வாகம்
மேலும் ஏர் இந்தியா நிர்வாகம் பல விருப்ப விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் ஆய்வு செய்ய 2வது கட்டத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாக DIPAM அமைப்பின் செயலாளர் துஹின் காந்த பாண்டியா தெரிவித்துள்ளார்.