டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றியவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கடந்த ஜூன் மாதம் முதல் விஆர்எஸ் திட்டத்தை ஏர் இந்தியா அறிவித்தது என்பதும் அதில் பல ஊழியர்கள் வெளியேறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் இரண்டாவது விஆர்எஸ் திட்டத்தை அறிவிக்க இருப்பதாக கூறப்படுவதால் இதில் எத்தனை ஊழியர்கள் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா
அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை சமீபத்தில் டாடா குழுமம் வாங்கியது என்பதும் அதன் பிறகு அந்நிறுவனம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா இளைய பணியாளர்களை வேலைக்கு எடுக்கவும் பணியாளர்களின் செலவை குறைக்கும் வகையிலும் விஆர்எஸ் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
முதல் விஆர்எஸ் திட்டம்
ஏற்கனவே ஏர் இந்தியா அறிவித்த முதல் விஆர்எஸ் திட்டத்தின்படி பல ஊழியர்கள் வெளியேறிய நிலையில் இரண்டாவது ஓய்வூதிய திட்டத்தையும் அறிவிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரண்டாவது விஆர்எஸ் திட்டம் ஊழியர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1500 ஊழியர்கள்
டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய நிலையில் முதல் விஆர்எஸ் திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இதில் 1500 ஊழியர்கள் இந்த திட்டத்தின்படி வெளியேறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 12,085 ஊழியர்கள் இருப்பதாகவும் அதில் 8,084 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு 2 அல்லது 3 மாதங்களில் இரண்டாவது விஆர்எஸ் திட்டம் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்ட வயது மற்றும் வேலையின் தன்மையைப் பொறுத்து இந்த விஆர்எஸ் திட்டத்தின்படி ஊழியர்கள் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய பணியாளர்கள்
ஒருசில ஊழியர்களை குறைப்பதற்கும், சிறந்த திறமையான ஊழியர்களை நிறுவனத்திற்கு கொண்டு வரவும் ஏர் இந்தியா இந்த புதிய விஆர்எஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நிர்வாக ஊழியர்கள், விமானிகள், கேபின் பணியாளர்கள் ஆகியோர்களை ஏர்இந்தியா வேலைக்கு அமர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணைத்தொகை
ஏர் இந்தியா நிறுவனம் அளித்த முதல் விஆர்எஸ் திட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணி செய்தவர்கள் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விஆர்எஸ் திட்டத்தின்படி வெளியேறும் ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.