ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மூத்த மகனுமான ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோக மேத்தா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி தாத்தா பாட்டி ஆகியுள்ளனர். இதனால் அம்பானி குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது.
இதனிடையில் முகேஷ் அம்பானி பேர குழந்தையுடன் வெளியிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகியுள்ளது.
ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை
கடவுள் கிருஷ்ணன் அருளால் ஸ்லோகா மற்றும் ஆகாஷ் அம்பானிக்கு இன்று மும்பையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என அம்பானி குடும்பம் தெரிவித்துள்ளது. மேலும் தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாகவும் அம்பானி குடும்பம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி தோழி
திருபாய் அம்பானி பள்ளியில் ஆகாஷ் அம்பானி படித்துக் கொண்டு இருந்த போதே ஸ்லோகா மேத்தா உடன் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. திருமணத்திற்கு முன் இருவரும் நீண்ட நாள் டேட்டிங் செய்துள்ளனர்.
ஜூன் 2018ல் இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு மார்ச் 2019ல் திருமணம் நடந்தது.
மார்ச் 2019ல் திருமணம்
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி வைர வியாபாரியான ரசில் மேத்தாவின் மகளான ஸ்லோகா மேத்தாவை மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டார்.
பிரம்மாண்ட திருமணம்
ஆகாஷ் அம்பானி திருமணத்திற்குக் கூகிள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை முதல் பல பெரும் நிறுவனங்களின் தலைவர், அரசு தலைவர்கள், ரஜினிகாந்த் உட்படப் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா திரும்பிய அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம் நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்த நிலையில், தீபாவளிக்கு முன்பு தான் இந்தியாவிற்குத் திரும்பினர். தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களிலேயே அம்பானி வீடு மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மூத்த பேரன்
ஸ்லோகா மற்றும் ஆகாஷ் அம்பானிக்கு குழந்தை பிறந்துள்ளதன் மூலம் முகேஷ் அம்பானி முதல் முறையாகத் தாத்தாவாகியுள்ளார். மேலும் முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி உடன் பிறந்த இரட்டை குழந்தையான ஈஷா அம்பானி 29 வயது, அனந்த் அம்பானி 25 வயது ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
மேலும் முகேஷ் அம்பானியின் தாய் கோகிலாபென் அம்பானி கொள்ளு பேரனைப் பெற்றுள்ளார்.
ஆகாஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாகம் மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
இவரது தலைமையில் தான் தற்போது ரிலையன்ஸ் ஜியோ பல புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாற முக்கியமான காரணமும் ஆகாஷ் மற்றும் ஈஷா அம்பானியின் வருகை தான்.
ஈஷா அம்பானி தனது படிப்பை முடித்து 2014ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத்திலும், ஆகாஷ் அம்பானியும் ஜியோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
நிறுவன கைப்பற்றல்
மேலும் சமீப காலமாக ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல நிறுவனங்களைக் கைப்பற்றி வருவதும் ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகத்தில் தான்.