கொரோனாவால் நாட்டின் வர்த்தகச் சந்தையும், பொருளாதாரமும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. மக்களிடம் போதிய வருமானமும், வேலைவாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் மக்கள் செலவு செய்யும் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகச் சந்தையும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வங்கிகள் தங்களது வராக்கடன் அளவை குறைக்கும் முயற்சியுடன், நாட்டின் வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கும் பொருட்டு மக்களைக் கடன் வாங்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கடனுக்குகான கட்டண தள்ளுபடி, குறைந்த வட்டி விகிதம், விரைவாகக் கடன் வழங்கும் முறை எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதுவும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இதை வாய்ப்பாகக் கருதி தனியார் வங்கிகள் மட்டும் அல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
முன்னணி வங்கிகள்
இந்திய வங்கி சேவையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் இந்தப் பண்டிகை காலத்தில் ஏற்படும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து விதமான கடன்களுக்கும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் அடுத்த சில வாரத்தில் வர்த்தகச் சந்தை புதிய உச்சத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு கடந்த காலாண்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதாரச் சரிவில் இருந்து இந்த ஆண்டு மீண்டு வரவும் வாய்ப்பு உள்ளது.
ஆதித்யா பூரி
இந்த மோசமான காலத்தில் மக்கள் மத்தியில் positivity கொண்டு வரவும், வர்த்தகச் சந்தையில் டிமாண்டு உருவாக்கவும் வங்கிகளின் இந்த வட்டி குறைப்பு பெரிய அளவில் உதவும் என ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாகத் தலைவர் ஆதித்யா பூரி தெரிவித்துள்ளார்.
ஹெச்டிஎப்சி வங்கி கடந்த ஆண்டும் கடனுக்குகான கட்டண தள்ளுபடி, குறைந்த வட்டி விகிதம், விரைவாகக் கடன் வழங்கும் முறை போன்று பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதன் மூலம் கடன் வர்த்தகத்தில் 60 சதவீதம் வரையிலான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இந்த ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், டிஜிட்டல் கடன் கோரிக்கையில் 2.5 மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆதித்யா பூரி.
ரீடைல் வர்த்தகம்
இந்தப் பண்டிகை காலத்தில் வங்கிகளுக்கு மிகப்பெரிய இலக்காக இருப்பது ரீடைல் பிரிவு கடன்கள் தான், தற்போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சூழ்நிலை நிலையாக இல்லை என்பதால் நிறுவன கடன்கள் பிரிவில் கவனத்தை வங்கிகள் குறைத்துள்ளது.
பொதுவாகப் பண்டிகை காலத்தில் ரீடைல் கடன்கள் பிரிவில் அதிகளவிலான வர்த்தகம் இருக்கும், ஆனால் இந்த முறை மொத்த கவனத்தையும் ரீடைல் கடன் பிரிவிற்கு இந்திய வங்கிகள் திருப்பியுள்ளது.
எஸ்பிஐ
பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ கார் லோன், கோல்டு, லோன், தனிநபர் கடன், ஹோம் லோன் என அனைத்து ரீடைல் கடன்களுக்கும் பிராசசிங் கட்டணக்தை 100 சதவீதம் ரத்து செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலம் கடன் கோரிக்கை வைப்பவர்களுக்குக் கடனில் 0.05 சதவீத வட்டி தள்ளுபடி பெறலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.
வர்த்தகச் சந்தை
எலக்ட்ரானிக்ஸ், ஆடை, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே பண்டிகை கால வர்த்தகத்திற்காகத் தனது உற்பத்தியை அதிகரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்தும் வரும் அதேவேளையில், மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்ற அச்சம் அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மனதில் உள்ளது.
ஜாக்பாட்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் அதிகளவிலான தள்ளுபடிகள் உடன் கடன் வழங்கத் தயாராகியுள்ளது. வங்கிகளின் இந்த முடிவு வர்த்தகர்களுக்கு மட்டும் அல்லாமல் மக்களுக்கும் ஜாக்பாட் தான்.
கார், வீடு, பைக், போன்ற நீண்ட நாள் கனவை இந்தப் பண்டிகை காலச் சலுகை கடனில் நிறைவேற்ற முடியும்.