டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் (written off bad loans ) விகிதமானது 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் வசூலிக்க முடியாத மோசமான கடன் விகிதமானது (Written off bad loan) 10,09,511 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வசூலிக்க முடியாத வாரக்கடன் 8.5 லட்சம் கோடி ரூபாய் ரைட் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடன் வாங்கிய தொழிலதிபர்கள்
வங்கிகளில் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு என வங்கிகள் பெரியளவில் கடன் வழங்கி வருகின்றன. எனினும் சில சமயங்களில் இந்த கடனில் ஒரு பகுதிகள் வசூலிக்க முடியாமல் போகின்றது. உதாரணத்த்திற்கு கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய விஜய மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி என பலரும் தப்பினர். எனினும் பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சொத்துகள் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளன.
திணறும் வங்கிகள்
எனினும் இன்று வரையிலும் வங்கிகள் முழுமையாக கடனை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றன. கடந்த ஆண்டில் இது குறித்தான பெரும் சர்ச்சையே உருவானது எனலாம். பெரும்பாலும் ரைட்ஆப் செய்யப்பட்ட கடன்கள் வசூல் செய்ய முடியாது என்றே கூறப்படுகின்றது. ஆனாலும் இதனை வசூலிக்க வங்கிகள் முயற்சி எடுக்கும். இது நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் விளக்கமும் கொடுத்தது நினைவுகூறத்தக்கது.
எந்த வங்கி எவ்வளவு ஒதுக்கீடு?
அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட தொகையானது கடந்த 4 ஆண்டுகளில் 2018 - 19 முதல் 2021 - 22 வரையில் மட்டும் 8.5 லட்சம் கோடி கடன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எஸ்பிஐ வங்கியின் பங்கு மட்டும் 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. எஸ்பிஐ தொடர்ந்து பஞ்சாப் வங்கியில் 59,807 கோடி ரூபாயும், இதே ஐடிபிஐ வங்கியில் 33,135 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியில் 42,164 கோடி ரூபாயும், ஹெச் டி எஃப் சி வங்கியில் 31,516 கோடி ரூபாயும் ஒதுக்கி வைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு
இது குறித்து கடந்த நவம்பர் மாதமே காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை வாராக்கடன்கள் 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது பின்னர் 2014-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுக்குள் 18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 5 ஆண்டுகளில் 365% அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தது.
வசூலிக்க முடியாத கடன்
அதேபோல கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடி வசூலிக்க முடியாத வாராக்கடன் கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவற்றில் 13,000 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது என்று பட்டியல் போட்டிருந்தது. இந்த நிலையில் தான் தற்போது நிதியமைச்சகத்தின் விளக்கமும் வந்துள்ளது.