உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக பெரிய நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் கூட ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்து வருகிறது என்பதும், சில நிறுவனங்கள் கிளைகளை மூடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூ கேரள அலுவலகத்தை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
பைஜூ நிறுவனம்
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான பைஜூ தனது திருவனந்தபுரம் அலுவலகத்தை மூடிவிட்டு அதில் பணி செய்து கொண்டிருந்த 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அமைச்சர்
கேரள அரசின் பொது கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சர் சிவன்குட்டி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறிய போது பிரபல கல்வி நிறுவனம் பைஜூ தனது திருவனந்தபுரம் அலுவலகத்தை மூடிவிட்டு ஊழியர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாக தனக்கு புகார் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் அலுவலகம்
மேலும் திருவனந்தபுரம் பைஜூ அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தன்னிடம் வந்து தங்களுடைய பணியை காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் வேலை இழப்பு உள்ளிட்ட பல புகார்களை வந்துள்ளதால் இதுகுறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.
ராஜினாமா
திருவனந்தபுரம் பைஜூ அலுவலகத்தில் பணிபுரியும் 170க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சர் சிவன்குட்டி அவர்களை சமீபத்தில் சந்தித்ததாகவும் பைஜூ நிர்வாகம் தங்களை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செட்டில்மெண்ட்
மேலும் அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை நவம்பர் 1ஆம் தேதி அன்று பைஜூ நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமென்றும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக இருந்தால் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாத சம்பளம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் ஆக உடனடியாக செலுத்த வேண்டுமென்றும் ஊழியர்களின் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு பைஜூ நிர்வாகம் என்ன பதில் கூறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஊழியர்கள் குறைப்பு
பைஜூ நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 22 பில்லியன் டாலர்கள் என்றாலும் கடந்த 2021 ஆம் நிதியாண்டில் அந்நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் தற்போது 50 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக வருவாய் குறைந்து கொண்டே இருப்பதால் எதிர்காலத்தில் படிப்படியாக இன்னும் அதிக பணியாளர்களை நீக்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.