2022-ம் ஆண்டு பருத்தி விலை 40 சதவீதம் உயர்ந்து 11 வருடங்கள் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பருத்தி நூற்பாலைகள் மற்றும் பருத்தி ஜவுளி ஆடை உற்பத்தியாளர்களை பெரும் அளவில் பாதிப்படைந்துள்ளனர்.
பல நூற்பு ஆலைகள் ஏற்கனவே தங்களது வேலை நேரத்தைக் குறைத்துவிட்டனர். சில ஆடை உற்பத்தியாளர்கள் சில நாட்களுக்கு தங்களது உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
நுகர்வு சரிவு
பருத்தி விலை ஏற்றத்தால் மாதத்திற்கு 29 லட்சம் பேலாக இருந்த நுகர்வு, இப்போது 19 லட்சம் பேலாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் பருத்தி விலை அதிகரித்துள்ளது மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவை சரிந்ததே நூற்பாலைகள் கவலைப்படக் காரணமாக உள்ளது.
தமிழ்நாடு நூல் உற்பத்தியாளர்கள்
இந்தியாவின் நூல் தேவையில் 40 சதவீதம் பங்கு வகித்து வரும் தமிழ்நாட்டு நூற்பாலைகள் பல 5 நாட்களாக தங்களது வேலை நாட்களைக் குறைத்துள்ளனர். மேலும் 24 மணிநேரமும் இயங்கி வந்த சில ஆலைகள் 12 மணி நேரமாக வேலை நேரத்தைக் குறைத்துள்ளார்கள். எனவே பருத்தி நூல் உற்பத்தி 35 முதல் 40 சதவீதமாகச் சரிந்துள்ளது.
குஜராத்
இந்தியாவில் அதிகளவில் பருத்தி விளையும் மாநிலமான குஜராத்தில் நூல் நூற்பவர்களுக்கு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
பருத்தி விலை உயர்வால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், உள்ளீட்டுச் செலவை அதிகரிக்கும். நூற்பாலைகள் மட்டும் அந்த விலைவாசி உயர்வின் சுமையை சுமக்க முடியாது.
வரி குறைப்பு
ஜவுளி துறையில் ஏற்பட்டு வரும் இந்த அசாதாரண சூழலைச் சரி செய்ய, ஏப்ரல் மாதம் பருத்தி இறக்குமதி வரியை 10 சதவீதம் குறைத்து அறிவித்தது மத்திய அரசு. ஆனால் அது விலை குறைப்பிற்கு மாறாகச் சர்வதேசச் சந்தையிலும் விலை ஏறுவதற்கான காரணமாக அமைந்துவிட்டது.
செயற்கை விலை தட்டுப்பாடு
உள்நாட்டுப் பருத்தி உற்பத்தி, இறக்குமதி பருத்தி என ஏதுவாக இருந்தாலும் இந்தியாவின் முக்கிய 5 நிறுவனங்கள் தான் அவற்றை வாங்குகின்றன. பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியதால் இது அந்த நிறுவனங்களுக்குச் சாதமாக அமைந்துள்ளன. எனவே எவ்வளவு இருப்பு வைத்துள்ளோம் என்பதை மறைத்து செயற்கையாக இந்த விலை ஏற்றம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியப் பருத்தி கழகம்
மேலும் பருத்தி விலை உயர்வு மற்றும் தரமான பருத்தி கிடைக்காமல் இருப்பதற்கு இந்திய பருத்தி கழகம் 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் பருத்தி கொள்முதலை நிறுத்தியதும் முக்கிய காரணம் என கூறுகிறார்கள்.
தொடர்ந்து அதிகரிக்கும் விலை
சில மதங்களுக்கு முன்பு பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) விலை 27 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரையிலிருந்தது. ஆனால் இப்போது 97 ஆயிரம் முதல் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள்
பருத்தி இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருந்தாலும் அதன் நன்மை சந்தைக்கு வரை 3 மாதங்கள் வரை ஆகும். விலை உயர்வால் பல நூற்பாலைகள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது சந்தையை மட்டுமல்லாமல், விரைவில் வாடிக்கையாளர்களின் பாக்கெட்களையும் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
போராட்டம்
நூல் விலையை குறைத்து, மீண்டும் பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மே 16 முதல் மே 21 வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.