ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும், இந்த 500 கோடி ரூபாய் மோசடி மூலம் 100 சதவீதம் உண்மையாகியுள்ளது.
இந்திய அரசு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதில் ஏற்படும் நஷ்டத்திற்கும், மோசடிக்கும் அரசு பொறுப்பு அல்ல என அறிவித்தது மட்டும் அல்லாமல் பலர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதை மக்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான வரியை விதித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் ஒரு மோசடி கும்பல் பலரை ஏமாற்றிச் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளது.
500 கோடி ரூபாய் மோசடி
மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டும், எப்படி அவர்களுக்குப் பொய்களை அடுக்கி நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதை மாஸ்டர் பிளான் போட்டு இந்த மோசடி கும்பல் டெல்லி மக்களிடம் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான தொகையை மோசடி செய்துள்ளது.
கிரிப்டோகரன்சி
இந்த மோசடியாளர்கள் புதிதாக வரவிருக்கும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி, சுமார் 500 கோடி ரூபாய் தொகையைப் பொது மக்களிடம் ஏமாற்றிய தனிநபர்கள் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
200 சதவீதம் வருமானம்
இந்த மோசடியாளர்கள் மக்களிடம் தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு 200 சதவீதம் வருமானம் தருவதாகக் கூறி ஆசை காட்டியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களை விடுமுறைக்காகக் கோவாவுக்கு அழைத்துச் சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தி, பார்டி வைத்துள்ளனர்.
கோவா
கோவாவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலீட்டாளர்களுக்காக ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சிக்கலான செயல்முறையை அவர்களுக்கு விளக்கியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு அதிகப்படியான வருமானத்தை வழங்க முடியும் என நம்ப வைத்துள்ளனர்.
துபாய்
மேலும் தங்கள் திட்டத்தில் முதலீடு செய்யும் பெரிய முதலீட்டாளர்களுக்குத் துபாயில் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடும் சலுகையை அளிப்பதாக உறுதியளித்தனர், அதே நேரத்தில் அனைவருக்கும் 200 சதவீதம் உறுதியான வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்தனர்.
ஆடம்பர அலுவலகம்
துபாயில் இந்த மோசடியாளர்கள் ஒரு ஆடம்பரமான அலுவலகத்தைக் கட்டுவதாகவும் கூறினர், ஆனால் ஒரு சில முதலீட்டாளர்கள் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கத் துபாய்க்குச் சென்று செக் செய்தபோது, அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டிக்கொண்டு இருக்கும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களை காட்டியுள்ளனர்.
கூட்டுறவு சங்க வங்கி
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் கூட்டுறவு சங்க வங்கியை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர், ஆனால் அது கட்டாயம் பொய்யாகத் தான் இருக்கும் என இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறைக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் 1.47 கோடி மோசடி
இந்த மாபெரும் 500 கோடி ரூபாய் மோசடியில் ஒருவர் 1.47 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இப்புதிய கிரிப்டோகரன்சி தற்போது 2.5 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகவும், விரைவில் இது ராக்கெட் வேகத்தில் வளரும் எனவும், உலகின் பல நாடுகளில் இது அறிமுகம் செய்யப்படும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறப்பட்டதாகக் காவல் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
FIR அறிக்கை
ஒரு வருடத்தில் 200 சதவீதம் லாபம், ஒவ்வொரு மாதமும் 5 முதல் 20 சதவீத லாபம், முதலீட்டு தேதியை பொறுத்து ஒரு மாதத்தில் 5, 15, 25 ஆம் தேதிகளில் வங்கி கணக்கில் முதலீட்டுக்கான டெபாசிட் செய்யப்படும் எனப் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.