சமீப காலமாகவே டாடா குழுமத்துக்கு நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். அடுத்தடுத்து பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரி, தான் மீண்டும் டாடா சன்ஸ் குழும தலைவராக பொறுப்பேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
எனினும் சைரஸ் மிஸ்திரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தீர்ப்பாயத்தில் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.
ஆனாலும் எனக்கு மீண்டும் டாடா சன்ஸ் குழுமத் தலைவராகவோ, அல்லது இயக்குனராகவோ நுழைய விருப்பம் இல்லை. அதே சமயம், எங்களிடம் உள்ள குறைந்த பங்குகளின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டு கொடுக்காமல் தீவிரம் காட்டுவோம். கம்பெனியின் நலனை கருத்தில் கொண்டு, நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டாடாவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்
நாட்டின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் உணவுக்கு போடும் உப்பில் இருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை என பல்வேறு பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. இதன் தலைவராக இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அதன் தலைவராக சபோர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சைரஸ் மிஸ்திரியின் பங்கு
டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரிக்கு 18 சதவிகித பங்கு உள்ளது. இதே டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழும நிறுவனங்கள் மற்றும் ரத்தன் டாடாவுக்கு, 81 சதவிகித பங்குகள் உள்ளது. இப்படி ஒரு நிலையில், கடந்த 2016ல் அக்டோபரில் சைரஸ் மிஸ்திரியை பதவியில் அமர்த்தியவறே, பதவியில் இருந்து நீக்கி ரத்தன் டாடா நடவடிக்கை எடுத்தார்.
நிர்வாக சீரமைப்பு
மேலும் நிர்வாகத்தை சீரமைக்கும் பொருட்டு நிறுவனத்தின் பல்வேறு இயக்குனர்களையும் மாற்றி அமைத்தார். இது தவிர டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதோடு கவுரவத் தலைவராக ரத்தன் டாடாவும் தனது பதவியை தொடர்ந்தார். இப்படி ஒரு நிலையில் தான் தன்னை நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, சைரஸ் மிஸ்திரி கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
டாடாவுக்கு எதிராக வழக்கு
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. அதில், சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமம் பதவி நீக்கியது செல்லாது. மேலும் மீண்டும்
அவரை தலைவராக நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது வழக்கு தொடர்ந்த சைரஸ் மிஸ்திரியோ தனக்கு இந்த நிறுவனத்தின் மீண்டும் பதவியேற்க விருப்பமில்லை என நெற்றியில் அடித்தாற் போல் தெரிவித்துள்ளார்.
எதிர் வழக்கு
சைரஸ் மிஸ்திரி தான் பதவி வேண்டாம் என்ற கூறியிருந்தாலும், டாடா குழுமமோ தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டு டிசம்பர்18ல் அளித்த தீர்ப்பின்போது தங்களை விமர்சித்து கூறப்பட்டதை எதிர்த்து கம்பெனிகள் பதிவாளர் சார்பில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிஸ்திரி என்ன சொல்கிறார்
டாடா குழுமத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி, தனக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், பதவி தனக்கு வேண்டாம் என்றும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதனால் நீதி கிடைக்க வேண்டும் என்றும் மட்டுமே தான் வழக்கு தொடர்ந்ததாகவும், மற்றபடி தனக்கு பதவியில் அமரும் எண்ணம் துளியும் என்றும் கூறியுள்ளார்.