இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பிரபலமான வாகன வடிவமைப்பு நிறுவனமான டிசி டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான திலீப் சபாரியா மோசடி வழக்கின் கீழ் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திலீப் சபாரியாவின் கைது காரணமாக டிசி டிசைன் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனத்திற்கு இனி வரும் காலகட்டத்தில் High Profile வாடிக்கையாளர்கள் கிடைப்பது என்பது பெரும் சந்தேகமாக மாறியுள்ளது. திலீப் சபாரியா அப்படி என்ன மோசடி செய்துள்ளார்..?
திலீப் சபாரியாவின் டிசி டிசைன்
திலீப் சபாரியா ஆரம்பக்கட்டத்தில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பணியாற்றி வந்தவர், பின்னாளில் இந்தியாவிற்கு வந்து கஸ்டம் கார் தயாரிப்பில் இறங்கி இதற்காக டிசி டிசைன் என்ற பெயரில் தனியொரு நிறுவனத்தைத் துவங்கினார்.
டிசி அவென்டி கார்
இந்நிறுவனத்தின் வடிவமைப்புக்கு விரும்பி பல சினிமா முதல் தொழிற்துறை வரை பல பிரபலங்களை வாடிக்கையாளராகப் பெற்ற காரணத்தால் இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் தனிப் பிராண்டிங் உள்ளது.
இந்தியாவில் முதல் ஸ்போர்ட்ஸ் காரான டிசி அவென்டி கார்-யும் திலீப் சபாரியாவின் டிசி டிசைன் நிறுவனம் தான் வடிவமைத்தது.
பாலிவுட் பிரபலங்கள்
இந்நிறுவனத்தின் வடிவமைப்பு பலருக்கும் பிடித்துப்போகப் பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், சல்மான் கான், விவேக் ஓப்ராய், சஞ்சய் தத், கபில் ஷர்மான எனப் பல பிரபலங்கள் இந்நிறுவனத்திடம் பிரத்தியேகமாக ஆர்டர் செய்து கார்களை வாங்கியுள்ளனர்.
சமீபத்தில் ஹிரித்திக் ரோஷனுக்குப் பென்ஸ் வி கிளாஸ் காரையும், மாதுரி தீட்சித்-க்கு டோயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரையும் கஸ்டம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய பெயர் மாற்றம்
இந்த வருடத்தின் துவக்கத்தில் டிசி டிசைன் நிறுவனம் தனது பெயரை டிசி2 என மாற்றிக்கொண்டது மட்டும் அல்லாமல் இந்தியாவில் பிரபலமாகி வரும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது.
ஆனால் தற்போது நடந்துள்ள கைது இந்நிறுவன வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கார் பிரியர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
திலீப் சபாரியா மீது வழக்கு
10 நாட்களுக்கு முன்பு திலீப் சபாரியா மீது மும்பை காவல் துறையின் க்ரைம் பிரிவு போலீஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்தனர். காவல் துறையின் குற்ற அறிக்கையின் படி டிசி நிறுவனம் கஸ்டம் செய்த சில கார்கள் ஓரே இன்ஜின், ஓரே Chasis எண்-ஐ கொண்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
வரி ஏய்ப்பு மோசடி
இந்த மோசடி மூலம் கார் உரிமையாளர்களை மட்டும் அல்லாமல் அரசையும் ஏமாற்றி அதிகளவிலான வரி ஏய்ப்புச் செய்ய முடியும். தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி சுமார் 40 கோடி ரூபாய் அளவிலான நிதியியல் மோசடி மற்றும் போலி கார்களைத் தயாரித்த குற்றத்திற்காக ஐபிசி பிரிவு 420, 465, 467, 468, 471, 120(B) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மோசடி விற்பனை
இது மட்டும் அல்லாமல் டிசி நிறுவனத்தில் கார்களை ஆர்டர் செய்யும் நபர்களிடம் இருந்து கடனாகப் பணத்தைப் பெற்று, கார்களைத் தயாரித்துக் கொடுத்து வருகிறது. இதில் விற்பனை என்ற ஒன்று முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது, இதை நிதியியல் உலகில் hypothecation மோசடி என அழைக்கப்படுகிறது.
NBFC அமைப்பில் கடன்
மேலும் இந்தக் கடன்கள் அனைத்தும் NBFC அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்டு உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையில் சுமார் 90 கார்களை டிசி நிறுவனம் விற்பனை செய்துள்ளது என மும்பை க்ரைம் பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் டிசி அவென்டி கார் விலை சுமார் 42 லட்சம் ரூபாய்.