இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய வங்கி மோசடிகளில் முக்கியமானது DHFL கடன் மோசடிகள் தான். DHFL உரிமையாளர்கள் 87 போலி நிறுவனங்களையும், 2,60,000 போலி கடனாளர்களையும், ஒரு விர்ச்சுவல் வங்கி கிளையையும் உருவாக்கிப் பிற வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருட்டுத் தனமாக அபேஸ் செய்துள்ளனர் எனச் சிபிஐ விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இப்படி அபேஸ் செய்யப்பட்ட பணத்தில் DHFL உரிமையாளர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவான் சுமார் 24 ஓவியங்களைச் சுமார் 63 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளதாகச் சிபிஐ அமைப்பு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DHFL உரிமையாளர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவான் மொத்த 11,675 கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர்.
சிபிஐ
சிபிஐ அமைப்பு சமர்ப்பித்துள்ள குற்ற அறிக்கையில் DHFL ப்ரோமோட்டர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவான் ஆகியோர் இணைந்து 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சுமார் 11,675 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சுமார் 87 போலி நிறுவனங்களுக்கு அனுப்பியதன் மூலம் மோசடி செய்துள்ளனர்.
87 போலி நிறுவனங்கள்
இந்த 87 போலி நிறுவனங்களும் DHFL உரிமையாளர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவான் ஆகியோரின் ஊழியர்கள், அசோசியேட்ஸ் மற்றும் நண்பர்கள் பெயரில் திறக்கப்பட்டு உள்ளதும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
DHFL கபில் மற்றும் தீரஜ் வாதவான்
இந்த நிலையில் சிறப்புச் சிபிஐ நீதிமன்றம் இந்தக் குற்ற அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள 75 பேரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் DHFL நிதி பகிர்வுகள் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளதற்கான ஆதாரம் இருக்கும் நிலையில், சர்வதேச அளவிலான விசாரணை வேண்டும் எனச் சிபிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
DHFL நிறுவனம்
DHFL நிறுவனம் பிற வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை தனது ரகசிய கணக்கிற்குக் கொண்டு செல்ல இந்த 87 போலிக் கணக்குகளை ஒரு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளது. இதை விடவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. DHFL தனது வாடிக்கையாளர்களுக்கு (உண்மையான) கடன்களை அளிக்கப் பல சிறப்புக் கிளைகளைக் கொண்டு உள்ளது இது பெரும்பாலான வங்கிகளில் இருப்பது வழக்கம்.
சிறப்புக் கிளை
ஆனால் DHFL போலி நிறுவனங்களுக்குப் பணத்தை அனுப்புவதற்காகவே சிறப்புக் கோடு உடன் Bandra branch என்ற வங்கி கிளையை இயக்கியுள்ளது. பந்தரா வங்கி கிளை புத்தகத்தில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் கடன் பெற்றுள்ளது.
கபில் வாதவான்
மேலும் கடனுக்காக எவ்விதமான செயல்பாடுகளையும் வங்கி நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை, மேலும் இந்தக் கடன்கள் அனைத்தும் கபில் வாதவான் ஒப்புதல் அளித்துள்ளார். வாதவான் பிரதர்ஸ் இந்த மோசடிக்காகவே மென்பொருள் உதவியுடன் DHFL-ன் பந்தரா வங்கி கிளையை 001 என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
விர்ச்சுவல் வங்கி கிளை
மேலும் இந்த வங்கி கிளை விர்ச்சுவல் முறையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பண மோசடிக்காக 2,60,000 போலி கடன் பெறுபவர்களை வங்கியில் ஏற்கனவே இருக்கும் பெயர்கள், முகவரி ஆகியவற்றை வைத்து மென்பொருள் வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.
வாதவான் பிரதர்ஸ்
இது மட்டும் அல்லாமல் வாதவான் பிரதர்ஸ் தங்களது சொந்த செலவுகள், பாரின் டூர், பிரைவேட் ஜெட் வாடகைக்கு எடுத்தது முதல் பலவற்றுக்கும் இந்தப் பந்தரா வங்கி கிளை வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தைத் திருடியுள்ளது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.