ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனமொன்று வொர்க் ப்ரம் ஹோம் பணி கொடுப்பதாக அறிவித்து அதன் மூலம் மிகப்பெரிய மோசடி செய்திருப்பதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில போலி நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையில் பணிகள் இருப்பதாக கூறி அதற்காக டெபாசிட் என்று ஒரு தொகையை பெற்று மோசடி செய்து வருவது குறித்து ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன.
அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ரூபாய் 30 கோடி வரை வொர்க் ப்ரம் ஹோம் பணியாளர்களிடம் ஏமாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜினல் இந்தியா
2021 ஆம் ஆண்டு முதல் டிஜினல் இந்தியா என்ற நிறுவனம் நூற்றுக்கணக்கான வொர்க் ப்ரம் ஹோம் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கும் வேலை என்று கூறி அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்றும் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டியுள்ளது.
பணி
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் அமீர்பேட்டை ஆகிய இடங்களில் அலுவலகத்தை அமைத்த இந்த நிறுவனம் சில ஆங்கில நாவல் புத்தகங்களின் பிரதிகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பணியை ஊழியர்களிடம் கொடுத்தது.
2027 வரை வேலை
இந்த நிறுவனத்திடம் சுமார் 5,30,000 முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் 2027ஆம் ஆண்டு வரை பணி இருக்கும் என்றும் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்தது.
வைப்புத்தொகை
ஆனால் அதே நேரத்தில் இந்த பணியில் சேர ரூ 5.5 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களிடம் நிபந்தனை விதித்தது. இந்த வைப்பு தொகையை 6 மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதியளித்தது.
இளைஞர்கள் ஆர்வம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி இருந்தவர்களுக்கு இந்த வேலை மிகப்பெரிய வாய்ப்பாக தெரிந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த வேலைக்கு பதிவு செய்தனர். டிஜினல் இந்தியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'பிடிஎஃப் நகல்களை பென் டிரைவரில் சேமித்து கொடுக்க வேண்டும் என்றும் ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு அந்த தொகையும் சரியாக வழங்கப்பட்டது என்றும் கூறினர்.
நம்பிக்கை மோசடி
ஆனால் கடந்த சில வாரங்களாக பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது என்றும், ஆறு மாதம் கழித்து திருப்பி தருவதாக கூறப்பட்ட வைப்புத்தொகை குறித்தும் எந்தவித பதிலும் கூறவில்லை என்றும் தெரிவித்தனர். ஆஃபர் லெட்டர், சரியான நேரத்தில் பணம் செலுத்துதல் மற்றும் பே ஸ்லிப் ஆகியவற்றை கொடுத்ததால் டிஜினல் நிறுவனத்தை நம்பி பலர் இந்த வைப்புத்தொகையை லட்சக்கணக்கில் செலுத்தினர் என்றும் ஆனால் தற்போது அந்நிறுவனம் நம்பிக்கை மோசடி செய்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
தலைமறைவு
பல மாதங்களாக டிஜினல் ஊழியர்களுக்கு பேமென்ட் செலுத்தவில்லை என்றும் அதன் உரிமையாளர் அமித் சர்மா என்பவர் ஜூன் மாதம் இறுதியில் தலைமறைவானார் என்றும் பணத்தை இழந்தவர்கள் காவல் துறையை அணுகி புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.30 கோடி மோசடி
டிஜிட்டல் மயமாக்கல் வேலையில் சுமார் 600 பேர்களிடம் வைப்புத்தொகை வாங்கி ஏமாற்றிய வகையில் ரூ.30 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அலுவலக ஊழியர்களும் புகார் கூறியுள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை
அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் கட்டிய வைப்புத்தொகை ரூஉ.5.5 லட்சம் தவிர பதவி உயர்வுக்காக கூடுதல் டெபாசிட் தொகையையும் ஒரு சிலர் கட்டி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும்? தலைமறைவாகியுள்ள அமித்ஷர்மா பிடிபடுவாரா? ஊழியர்கள் கட்டிய வைப்புத்தொகை திரும்ப கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.