இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான வர்த்தகப் பிரிவில் ஒன்று ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், இத்துறையில் முன்னோடியாகத் திகழும் சோமேட்டோ, ஸ்விக்கி உட்பட அனைத்துப் புட் டெலிவரி சேவை நிறுவனங்கள் அளிக்கும் கூப்பன் டிஸ்கவுன்ட்-ஐ மத்திய வருமான வரித்துறை கண்காணிப்பில் வைத்துள்ளது.
ஜிஎஸ்டி விதிகள்
ஜனவரி 2022 முதல் ஜிஎஸ்டி விதிகள் படி சில முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளது. டெலிவரி சேவை நிறுவனங்கள் கொடுக்கும் தள்ளுபடிகள் பணம் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது டிஜிட்டல் வாலட்டைப் பயன்படுத்துவதற்கு எதிராக உள்ளது.
தள்ளுபடிகள்
உதாரணமாகச் சோமேட்டோ நிறுவனத்தில் 500 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்யும் போது ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்ட் வாயிலாகப் பணம் செலுத்தினால் 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தின் அளவு 450 ரூபாயாகக் குறைகிறது.
வங்கி மற்றும் நிதி சேவை
இப்படி ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற அனைத்து நிறுவனங்களும் பல்வேறு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனத்திடம் கூட்டணி சேர்ந்து பணப் பிரிமாற்ற சேவையை அளிக்கிறது.
"பண்டமாற்று" சேவை
இது வங்கி சேவைகள் அல்லது கிரெடிட் கார்டுகளை மேம்படுத்துவதற்கான "பண்டமாற்று" விதமாக உள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் எதுவும் இலவசம் இல்லை, பண்டமாற்றுக்குக் கூட வரி விதிக்கப்படும் என்பது தான் தற்போது மத்திய அரசின் வாதம். இதனால் இத்தகைய சேவைக்கும் இனி வரி விதிக்கப்பட உள்ளது.
உணவகங்கள் - டெலிவரி செயலிகள்
இந்தப் பிரச்சனையைச் சரி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் வரித்துறை இப்பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் உணவகங்கள் மற்றும் டெலிவரி செயலிகள் மத்தியில் இருக்கும் தள்ளுபடி ஒப்பந்தங்கள் மற்றும் சலுகை ஏற்பாடுகளுக்கும் வரி விதிப்பு அல்லது தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 1
மத்திய அரசு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்பு உணவகங்களுக்கு இணையாக ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ-வை நடந்த வேண்டும் என முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
5 சதவீத ஜிஎஸ்டி வரி
இதன் படி வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பை ஏற்று உணவு டெலிவரி நிறுவனங்கள் தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை இதுநாள் வரையில் இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
வரி ஏய்ப்பு
இதனால் உணவு விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாது. இந்த முறையிலான வரி வசூல் மூலம் வரி ஏய்ப்பு, வரிச் செலுத்துவதில் செய்யப்படும் ஏமாற்று வேலைகளை தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
பிரச்சனை
இப்புதிய மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் டெலிவரி பாய்ஸ்க்கு அளிக்கப்படும் டிப்ஸ், சர்ஜ் கட்டணம், டெலிவரி கட்டணம், பேகேஜ் கட்டணம் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து 5 சதவீதம் வரியை வசூலிக்க வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.
இன்புட் டாக்ஸ் கிரெடிட்
இந்தச் சூழ்நிலையில் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான வரியை அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் 5 சதவீத வரி வசூலிக்காமல் 18 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்து இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற, ஸ்விக்கி - சோமேட்டோ முடிவை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதுகுறித்து முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.