இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமான பைஜூஸ் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பேர் போனது.
இப்போது அதை மேலும் உறுதி செய்யும் விதமாக அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2,500 நபர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கம் பற்றி பிஸ்னஸ் டுடே ஊடகத்துக்குத் தெரிவித்துள்ள அதன் செய்தித் தொடர்பாளர், இது உடனடியாக நடக்காது. அடுத்து வர இருக்கும் 6 மாதங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள்
2,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அதே நேரத்தில் புதிதாக 10,000 ஆசிரியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பைஜூஸ் நிறுவனத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது புதிய ஆசிரியர்களை பணிக்கு எடுப்பதன் மூலம் அது 30 ஆயிரமாக அதிகரிக்கும்.
பணி நீக்கம் செய்ய என்ன காரணங்கள்?
ஒரே வேலையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்வதைக் குறைத்து தொழில்நுட்பத்தைச் சிறப்பாக மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக 50 ஆயிரம் ஊழியர்களில் இருந்து 5 சதவீதத்தினரைப் பணி நீக்கம் செய்யும் முடிவை பைஜூஸ் எடுத்துள்ளது.
வளர்ச்சி
வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பான வளர்ச்சியை எட்ட மார்க்கெட்டிக்கிற்கான செலவு அதிகரிக்க பைஜூஸ் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெடிங் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்துள்ளது. இப்போது அதனை உலகம் முழுவதும் செய்ய திட்டமிட்டுள்ளது.
நட்டம்
திங்க் & லேர்ன் நிறுவனத்திற்குக் கீழ் செயல்பட்டு வரும் பைஜூஸ் 2021 நிதியாண்டில் 20 மடங்கு என மொத்தமாக 4,588.75 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவே கொரோனா காலத்தில் 2020 நிதியாண்டில் 231 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்தது.
லாபம் வேண்டும்?
சர்வதேச சந்தையில் கவனம் செலுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் வரும் ஆண்டுகளில் லாபத்தை நோக்கி பைஜூஸ் செல்ல உதவும் என தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள்
"முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீதான தனது பொறுப்பை உணர்ந்து தீவிரமாக, முதிர்ந்த நிறுவனமாக, வலுவான வருவாய் வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கைகள் மார்ச் 2023 இன் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் லாபத்தை அடைய உதவும்," என்று பைஜூஸ் இந்திய வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மிருணாள் மோஹித் கூறியுள்ளார்.