டெல்லி: நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்ப்பட்டவர் தான் ராஜிவ் குமார். இவர் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கி கணக்குகள் மற்றும் கே.ஒய்.சி நோக்கங்களுக்காக இந்திய குடிமக்கள் தங்கள் மதத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஆதாரமற்ற வதந்திகளை மறுத்துள்ளார்.
இந்திய வங்கிகள் வைப்புத் தொகையாளர்களையும் தங்கள் வாடிக்கையாளர்களையும், தங்கள் மதத்தை பட்டியிலிடுமாறு கேட்கலாம் என்ற அறிக்கை வெளியானதை அடுத்து, இந்த அறிக்கை பற்றி தெளிவு படுத்தியுள்ளார் ராஜிவ் குமார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் #Indian citizens to declare their religion for opening/existing #Bank account or for #KYC என்ற ஹேஸ்டாக்கள் மூலம் பரப்பட்டு வருகிறது.
ஆக இதுபோன்ற எந்த ஆதாரமற்ற வதந்திகளையும் நம்பாதீர்கள் என ராஜிவ் குமார் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில் அதனை எதிர்த்து பல்வேறான போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் அரகேறிங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு கருத்து பரவி வருவது பெரும் பிரச்சனையைக் கொண்டு வரலாம்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை கொடுக்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்காக இந்திய ஜனாதிபதியும் மறுநாளே (12-ந்தேதி) இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கி கணக்கு துவங்க மதம் குறிப்பிடப்பட வேண்டும் என்ற பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ராஜிவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.