2022ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவீடு கணிக்கப்பட்ட 6.8 சதவீத ஜிடிபி அளவை விடவும் சற்று அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சகம் இதைச் சரி செய்ய முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் படி மத்திய நிதியமைச்சகம் அனைத்து அமைச்சகங்களையும் டிஸ்யூ பேப்பர் முதல் பாரின் டிரிப் வரையில் தவிர்க்க முடிந்த, தேவையற்ற, கட்டுப்படுத்த முடிந்த செலவுகளைக் குறைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் அனைத்து அமைச்சகங்களையும் தங்களது மொத்த செலவில் 20 சதவீதத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
எதற்காக இந்தத் திடீர் செலவுகள் குறைப்பு..? மத்திய அரசுக்கு ஏன் இந்தத் திடீர் நிதி பற்றாக்குறை..?
இந்திய விவசாயிகள்
இந்திய விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டை அமோனியம் பாஸ்பேட் (DAP) விவசாய உரத்திற்கு அளிக்கும் மானியத்தை 140 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இதுநாள் வரையில் ஒரு மூட்டை உரத்திற்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் இனி 1200 ரூபாய் வரையிலான மானியம் பெற முடியும்.
DAP மானியம்
விவசாய உரங்களுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் மானியத்தின் பழைய விலைக்கே விவசாயிகள் உரத்தைப் பெற முடியும், இந்த அறிவிப்பு வாயிலாக மத்திய அரசுக்கு 14,776 கோடி ரூபாய் நிதிச் சுமை உருவாகியுள்ளது.
மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி நிலுவை
மேலும் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவையைச் சமாளிக்க 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடன் பெற மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுவும் மத்திய அரசுக்கு புதிய நிதி சுமை தான்.
இலவசமாகக் கொரோனா வேக்சின்
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருத்தை இலவசமாகக் கொடுக்கவும், மாநில அரசுக்கு வேக்சின் மூலம் நிதி சுமை அளிக்க வேண்டாம் என முடிவு செய்த மத்திய அரசு மொத்த வேக்சின் உற்பத்தியில் 75 சதவீதத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 18 வயது முதல் இருக்கும் அனைவருக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக வேக்சின் வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.
ரூ.15000 கோடி கூடுதல் செலவு
மத்திய அரசு ஏற்கனவே வேக்சினுக்காக 35000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இப்புதிய முடிவின் காரணமாக மத்திய அரசு 45,000 கோடி ரூபாய் முதல் 50000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டி வரும். அதாவது தற்போது கூடுதலாக 15000 கோடி ரூபாய் செலவு உருவாகியுள்ளது.
இலவச உணவு பொருட்கள்
இதேபோல் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் Pradhan Mantri Garib Kalyan Anna Yojana திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க உள்ளதாக மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக 1.1 முதல் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
இரு முக்கிய அறிவிப்பு
மோடி அறிவித்த வேக்சின் மற்றும் இலவச உணவு ஆகிய இரு அறிவிப்புகளும் மக்களுக்குப் பெரிய அளவில் உதவும் என்றாலும், இதன் மூலம் மத்திய அரசுக்கு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் கூடுதலாக 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான செலவு உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி நிதி பரிமாற்றம்
இதற்கிடையில் ரிசர்வ் வங்கி கணித்ததை விடவும் 45,612 கோடி ரூபாய் தொகையைக் கூடுதலாக அதாவது மொத்தம் 99,122 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. இதனால் நிதி பற்றாக்குறை சுமை சிறிது குறைந்தாலும் தற்போது அறிவிக்கப்பட்ட 20 சதவீதம் செலவுகள் குறைப்பு நடவடிக்கை கட்டாயம் தேவைப்படுகிறது.
20% செலவுகள் குறைப்பு
இது மட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும் மத்திய அரசு அதிகளவிலான பணத்தைச் செலவு செய்துள்ளது. நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதைத் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.