ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் டிசம்பர் 17, 2022 அன்று நடக்க உள்ளதாகவும், இக்கூட்டம் விர்சுவல் முறையில் நடக்கும் எனவும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடக்க உள்ள நிலையில் 47வது கூட்டம் ஜூன் 2022 இறுதியில் சண்டிகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பலகையை மறுசீரைப்புச் செய்ய வேண்டும் என நீண்ட காலமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் அதிக எண்ணிக்கையில் வரிப் பலகை இருப்பதாகவும், மற்றொரு தரப்பினர் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
வரிச் சீரமைப்பு
இதைச் சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அமைச்சரவை குழு தற்போது பயன்பாட்டில் இருக்கும் 12 மற்றும் 18 சதவீத வரி பலகையை ஒன்றாக இணைத்து 15 சதவீதம் என்ற புதிய வரி பலகையை உருவாக்கும் திட்டத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 21 முதல் பட்ஜெட் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தைத் துவங்கியுள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும், நவம்பர் 22 ஆம் தேதி விவசாயம், அக்ரோ பிராசசிங் துறை சார்ந்து நிதியியல் மற்றும் முதலீட்டுச் சந்தை, நவம்பர் 28ஆம் வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைச் சந்திக்க உள்ளார்.
வீடியோ கான்பிரான்ஸ்
2023 பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் பணிகள் துவங்கிவிட்ட நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை வீடியோ கான்பிரான்ஸ் மூலம் செய்ய முடிவு செய்திருக்கக் கூடும்.
47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜூன் மாதம் சண்டிகரில் நடந்த இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குப் பின், எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கியப் பொருட்கள்
மேலும் பிரின்டிங்/எழுத்தும் அல்லது வரையும் மை, எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் பிக்ஸ்சர்ஸ் மற்றும் அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. இதோடு ப்ரீ பேக் மற்றும் ப்ரீ லேபிள்-யிட்ட தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டது.
வரி உயர்வு
மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் டெட்ரா பேக் மீதான கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், வெட்டி மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் விலையை 0.25 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்த வரி மாற்றங்கள் மாற்றங்கள் ஜூலை 18, 2022 முதல் அமலுக்கு வந்தது.
கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் கேமிங்
மேலும், கேசினோ, ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் கேமிங் குறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, மாநிலங்களின் கூடுதல் உள்ளீடுகளின் அடிப்படையில் அதன் விதிமுறைகளில் உள்ள சிக்கல்களை மறு ஆய்வு செய்து அதன் பிறகு அறிக்கையைச் சமர்ப்பிக்க இருந்தது.
18 சதவீத ஜிஎஸ்டி வரி
கேசினோக்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரவிருக்கும் கூட்டத்தில் பேசப்பட உள்ளது. தற்போது ஆன்லைன் கேமிங்கிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மொத்த கேமிங் வருவாய் தொகைக்கும் வரி விதிக்கப்படுகிறது, இது ஆன்லைன் கேமிங் போர்டல்களால் வசூலிக்கப்படும் கட்டணமாகும்.
28 சதவீத ஜிஎஸ்டி
ஜூன் மாதம் கவுன்சிலுக்குச் சமர்ப்பித்த முந்தைய அறிக்கையில், திறமை அல்லது வாய்ப்பு போன்ற வேறுபாட்டைக் காட்டாமல் பிளேயர்கள் செலுத்தும் போட்டி நுழைவுக் கட்டணம் உட்பட மொத்த தொகைக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என அமைச்சரவை குழு பரிந்துரை செய்தது. ஆனாலும் ஜிஎஸ்டி கவுன்சில் தனது அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு GoM ஐ கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.