கொரோனா 2வது அலை இந்திய மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெரு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஊழியர்களுக்கும், ஊழியர்களின் குடும்பத்திற்கும் செய்து வருகிறது.
பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உயிரைக் காக்கும் பொருட்டுக் கொரோனா தடுப்பு மருந்து அளித்து வருகிறது, இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பு மருத்தை நேரடியாக அளித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவிலேயே ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும், உதவிகளையும் செய்து வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்கள்
கொரோனா-வை எதிர்த்துப் போராடும் வகையில் இன்போசிஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ், காக்னிசென்ட், ஜியோ, விப்ரோ ஆகிய அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கும் தனது ஊழியர்களுக்கும் பல உதவிகளைச் செய்து வரும் நிலையில், ஹெச்சிஎல் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பாராட்டுப்பவது மட்டும் அல்லாமல் வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு
கோவிட் தொற்றுக் காரணமாக ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது ஊழியர்களுக்கு 30 லட்சம் ரூபாய் அளவிலான இன்சூரன்ஸ் கவர் மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊழியர் டெப்பாசிட் இன்சூரன்ஸ் கவர் அளிக்கப்பட உள்ளதாக ஹெச்சிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிட்டதட்ட 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது ஊழியர்களுக்கு அளித்துள்ளது.
இன்சூரன்ஸ்-ன் முழுக் கவரேஜ்
மேலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஊழியர் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் முழுக் கவரேஜ்-ஐ ஊழியர்களின் குடும்பத்திற்கு ஹெச்சிஎல் நிர்வாகம் வழங்குகிறது.
ஒரு வருட சம்பளம்
இதுமட்டும் அல்லாமல் கொரோனா மூலம் உயிரிழக்கும் ஊழியரின் ஒரு வருடத்திற்கான சம்பளத்தையும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் என ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.
1,600 ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று
இன்றைய நிலவரத்தின் படி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் 1,600 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதில் சிலர் மரணம் அடைந்தும் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் குடும்பத்திற்குப் பல உதவிகள்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் கவர், ஒரு வருடம் சம்பளம் ஆகியவற்றைத் தாண்டி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஊழியர்களின் குடும்பம் அனைத்து வகையிலும் மீண்டு வர சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
மருத்துவம், கல்வி, வேலை
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 வருட மருத்துவக் காப்பீடு, குழந்தைகளின் கல்விக்கு 5 வருட காப்பீடு, இறந்தவரின் மனைவி அல்லது கணவன் விருப்பத்தின் அடிப்படையில் ஹெச்சிஎல் நிறுவன பணியில் சேர்வதற்கான பயிற்சி ஆகிய அனைத்தும் அளிக்கப்படும் என ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான விவி. அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
1.6 லட்சம் ஹெச்சிஎல் ஊழியர்கள்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் 1.6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 1,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நிறுவனம் கார்பஸ் பண்ட் உருவாக்க முடிவு செய்துள்ளது.
தினமும் ஒரு ரூபாய்
ஏற்கனவே உருவாக்கப்பட்ட 'Power of One' என்ற பெயரில் ஊழியர்கள் தினமும் ஒரு ரூபாய்ச் செலுத்தப்படும் தொகையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என ஹெச்சிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருடம் 5.76 கோடி ரூபாய்
வெறும் ஒரு ரூபாய் என்றாலும் மாதம் 48 லட்சம் ரூபாய், வருடம் 5.76 கோடி ரூபாய் அளவிலான நிதியை உருவாக்க முடியும். இது ஊழியர்களின் காப்பீடு மட்டும் அல்லாமல் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு உதவி செய்யப் போதுமானதாக இருக்கும்.