இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவையை வழங்கி வரும் ஹெச்டிஎப்சி நிறுவனம் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் கடுமையான வர்த்தகப் பாதிப்பைச் சந்தித்து லாபத்தில் சுமார் 22 சதவீத சரிவை அடைந்துள்ளது.
ஹெச்டிஎப்சி-யின் லாப அளவீடுகள் குறித்த கணிப்புகள் ஏற்கனவே முதலீட்டாளர்களுக்குத் தெரிந்து இருந்தாலும், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்திக்க உள்ளது ஹெச்டிஎப்சி.
இதோடு இந்நிறுவனத்தின் வாரக் கடன் அளவும் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்களின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
வருவாய் மற்றும் லாபம்
ஹெச்டிஎப்சி நிறுவனம் 2019ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 3,194 கோடி ரூபாய் வருமானமாகப் பெற்ற நிலையில், 2020 நிதியாண்டு மார்ச் காலாண்டில் 3,563 கோடி ரூபாய் வருவாய் பெற்று சுமார் 14 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆனால் வரிக்கு பிந்தைய லாப அளவீடுகளில் 2,861.58 கோடி ரூபாயில் இருந்து 2,232.53 கோடி ரூபாயாகக் குறைந்து சுமார் 22 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. மேலும் வரிக்கு முந்தைய லாப அளவீடுகளில் 27 சதவீத சரிவை அடைந்துள்ளது ஹெச்டிஎப்சி.
சலுகை
மார்ச் காலாண்டில் கொரோனா பாதிப்பிற்காக மத்திய அரசு 3 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தத் தேவையில்லை என அறிவித்தது. இது ஹெச்டிஎப்சி நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த மார்ச் காலாண்டில் வெறும் 398 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு மட்டுமே சலுகை கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா அறிவிப்பின் காரணமாகச் சலுகை கொடுக்கப்பட்ட தொகையின் 220 சதவீதம் அதிகரித்து 1,274 கோடி ரூபாயாக உள்ளது.
26 சதவீத கடன்
ஹெச்டிஎப்சி-யின் மொத்த கடன் அளவீடுகளில் சுமார் 26 சதவீத கடனுக்கு moratorium சலுகை பெறப்பட்டுள்ளது, இதேபோல் தனிநபருக்கான கடனில் சுமார் 21 சதவீத கடனுக்கு 3 மாத சலுகை பெறப்பட்டுள்ளது என ஹெச்டிஎப்சி தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடன் சலுகை
மத்திய அரசு மார்ச் மாதம் 3 மாதம் கடனுக்கான தவணையைச் செலுத்தாமல் இருக்க வாய்ப்பு கொடுத்த நிலையில் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பலர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் இது வங்கிகளுக்குத் தற்போது பெரும் சுமையாக அமைந்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 மாத சலுகை மே மாதம் வரையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு மீண்டும் 3 மாத சலுகையை அறிவித்து ஆகஸ்ட் மாதம் வரையில் நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நீட்டிப்பு ஹெச்டிஎப்சி நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வாரக் கடன்
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் வராக் கடன் அளவு மார்ச் காலாண்டில் 1.18 சதவீதத்தில் இருந்து 1.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் தனிநபர்-களின் வராக் கடன் அளவு 25 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 0.70 சதவீதத்தில் இருந்து 0.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் தனிநபர் அல்லாத வராக் கடன் அளவு 2.34 சதவீதத்தில் இருந்து 4.71 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.