இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 9.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக் கடன்களை தள்ளுபடி (Write off) செய்துள்ளன. இதில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன். வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகை, அந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் வங்கிகள் திரும்பப் பெற்ற தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தரவுகளின்படி, லோக் அதாலத்கள், கடன் மீட்பு தீர்ப்பாயங்கள், SARFAESI சட்டம் மற்றும் IBC போன்ற பல்வேறு பிரிவுகள் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகை 4.14 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.
அதாவது வங்கிகளால் வசூலிக்கப்பட்ட வாராக் கடனை விடவும் இரண்டு மடங்கு அதிக கடன்களை 5 ஆண்டு காலத்தில் வாராக் கடனாக அறிவித்துள்ளது.
வாராக் கடன் அளவு
பொதுவாக வங்கி நிர்வாகம் வாராக் கடன் அளவுகளை குறைக்க, வசூலிக்கப்பட முடியாத கடன்களை தனிப்பட்ட நிதி கணக்கிற்கு தள்ளப்பட்டு தனியாக நிர்வாகம் செய்யும். இதன் மூலம் வங்கி நிர்வாகங்கள் வாராக் கடன் அளவை குறைத்து காட்டியும், ஒதுக்கிவைக்கப்பட்ட கடன்கள் மீது கூடுதலான கவனத்தை செலுத்தி கடனை வசூலிக்க முடியும் என கூறுவது வழக்கம். இதை தான் வங்கி மொழியில் Write Off என கூறப்படுகிறது.
நிகர வாராக் கடன்
மார்ச் 2018ல் வங்கிகளின் மொத்த நிகர வாராக் கடன் அளவு 11.8 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில் வங்கி நிர்வாகம் அதிகப்படியான கடனை தள்ளுபடி செய்தது. இதனால் மொத்த வாராக் கடன் அளவு மார்ச் 2021ல் 7.3 சதவீதமாக குறைந்தது.
195 லட்சம் கோடி ரூபாய்
இது செப்டம்பர் 2021ல் 6.9 சதவீதம் குறைந்து 5 ஆண்டுகளில் மிகவும் குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
மார்ச் 31, 2021 தரவுகள் படி இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் 195 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை Write off அதாவது தற்காலிக கடன் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசு
இந்நிலையில் வணிக வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 9.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக் கடன்களை தள்ளுபடி (Write off) செய்த நிலையில் வெறும் 4.14 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிகள் மீட்பு செய்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் மத்திய அரசு போட்ட கட்டுப்பாடு தான்.
கொரோனா மற்றும் லாக்டவுன்
மத்திய அரசு கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக சுமார் ஒரு வருடம் மார்ச் 25, 2020 முதல் மார்ச் 24, 2021 வரையில் IBC வாயிலாக கடன் மீட்பு நடவடிக்கைகள் எடுக்க சில பிரிவுகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடன் மீட்பு அளவில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.