இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கிளைகளை அமைத்து தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அங்கு சென்று பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் இன்ஃபோசிஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனம் நியூயார்கிற்கு 5.6 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாவில் மோசடி
அதிலும் 2006 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கலிபோர்னியாவில் ஹெச்.1பி விசாவுக்குப் பதிலாக பி1 விசா வழங்கியிருக்கிறது. இதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து இன்ஃபோசிஸ் தப்பிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. வேலையின்மை இன்சூரன்ஸ், இயலாமை இன்சூரன்ஸ், வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான வரிகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கலிபோர்னியா அடார்னி ஜெனரல் சேவிடர் பெக்கரா கூறியுள்ளார்.
முன்னாள் ஊழியர் புகார்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முன்னதாக பணியாற்றிய ஜாக் பால்மர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த மோசடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் விசா மோசடி தொடர்பான இந்த குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது தான். அதாவது நியூயார்க் கெடு வைத்த 8,00,000 டாலர் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் இது ரூ.5.6 கோடியாகும்.
மாற்று விசாவால் என்ன பயன்?
இவ்வாறு மோசடி செய்து மாற்று விசாக்களில் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் இன்ஃபோசிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் மறுத்துள்ளதோடு, தவறு எதையும் செய்யவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தொடர் பிரச்சனை
இதற்கு முன்னர் 2017ம் ஆண்டில் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக நியூயார்க் நகரத்துக்கு 1 மில்லியன் டாலரை இன்ஃபோசிஸ் நிறுவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற இடியாப்ப சிக்கலில் மாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல பிரச்சனைகள் சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.