புதிய வந்தே பாரத் ரயில்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட்டத்தை பாதிக்கும் என ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தேஜஸ் ரயில்கள் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் தேஜாஸ் ரயில் பயணிகள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று ஐஆர்சிடிசி தனது கவலையை தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பிரபலமானால் தேஜஸ் ரயிலை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி கவலை
மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மற்றும் வழித்தடத்தின் மோதல் குறித்து ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இரயில்வேயின் பிரீமியம் கார்ப்பரேட் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே வந்தே பாரத் ரயில் பாழடிக்கின்றது என்றும் ஐஆர்சிடிசி கூறியது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் ரயில்கள் இயங்கி வரும் அதே வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்கினால், தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று ஐஆர்சிடிசி ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
எதிர்ப்பு ஏன்?
வந்தே பாரத் ரயிலுக்கு ஐஆர்சிடிசி எதிரி இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேஜஸ் ரயில் இயங்காத வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கலாம் என்றும், ஒரே வழித்தடத்தில் இரண்டு ரயில்களும் இயங்கினால் வந்தே பாரத் ரயிலுக்கு மட்டுமே பயணிகள் முக்கியத்துவம் தருவார்கள் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
அகமதாபாத் - மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ்
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அகமதாபாத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:05 மணிக்கு மும்பையை வந்தடையும். மறுபுறம் மும்பை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:10 மணிக்கு அகமதாபாத்தை சென்றடைகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த நிலையில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அகமதாபாத்தில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு மும்பையை சென்றடையும். மற்ற திசையில், மும்பை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 9:05 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.
பாதிப்பு
இவ்வாறு ஒரே வழித்தடத்தில் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கினால் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வந்தே பாரத் ரயில்களை தான் பயணிகள் தேர்வு செய்வார்கள் என்றும், இதனால் தேஜஸ் ரயில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது.